மதுவிலக்கல்ல - மது ஒழிப்பு
நாட்டின் இன்றைய தூணாகிய எனக்கு மது என்று சொன்னதும் அதுவும் தமிழகமும் மதுவும் என்று சொல்லிக் கட்டுரை எழுதச் சொன்னதும் நினைவில் வருவது, தமிழ் நாட்டில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் தமிழக அரசு நிறுவனமாகிய "தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்" என்பதனைச் சுருக்கமாக
"TASMAC" (TAmailnadu State MArketing Corpration) அல்லது டாஸ்மாக் என்று எல்லோரும் அழைக்கப்படும் டாஸ்மார்க்-த்தான். நாட்டின் குடிமக்கள் நிறுவிய அரசு, அம்மக்களை குடிகாரராக மாற்ற உதவும் அரசின் கரம் தான் டாஸ்மாக் என்றால் மிகையாகாது. ஏனெனில் தமிழகத்தில் மது பானங்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்கும் ஏகபோக உரிமையை இந்த டாஸ்மாக் மட்டும் தான் பெற்றுள்ளது. அதுவும் எம்.ஜி.ஆர் எனச் செல்லமாக அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களால் 1983-ஆம் ஆண்டு மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அமைப்பாக உருவாக்கப்பட்டுவிட்டது என்றாலும், 2003-ஆம் ஆண்டு ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்த பொழுது, அதனை மது மொத்த விற்பனை மட்டும் அல்லாது சில்லறை விற்பனையையும் செய்ய இறக்கிவிட்டப்பின் தான், டாஸ்மாக் இத்தனை பிரபலம். அதுவரை டாஸ்மாக் என்றால் யாருக்குத் தெரியும்?? உங்களுக்குத் தெரியுமா? ஆனால் இன்று டாஸ்மாக் என்றால் பள்ளி சிறார் வரை தெரிகிறது. இவ்வாறு அசுர வளர்ச்சியாக சென்று கொண்டிருக்கும் அரசு நிறுவனமாகிய டாஸ்மாக்கிற்கு முழுக்கு இட வேண்டும் என்பதே இக்கட்டுரைப் போட்டியின் விருப்பமாக இருப்பதால் நானும் மதுவிலக்குப் பற்றியே தொடர்கிறேன்...
மதுவிலக்கு:
மதுவிலக்கு என்ற வார்த்தை மிக நீண்ட ஆண்டுகளாக நம் தமிழகத்தினை ஆண்டு வந்துள்ளது என்பதனை இவ்வாய்ப்பின் மூலம் தான் தெரிந்து கொண்டேன். முதன் முதலில் 1937-ஆம் ஆண்டில் "மதுவிலக்கு" தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அது நீண்டு 2001-ஆம் ஆண்டு வரை மது விற்பனை தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருந்தது என்பதனை கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. ஆனால், இடையில் 1971-74(மு.கருணாநிதி) , 1983-87(எம். ஜி. இராமச்சந்திரன்) & 1990 -91 (மு. கருணாநிதி)ஆக மொத்தம் 8 வருடம் இத்தடையினை தமிழக அரசு தளர்த்தியுள்ளது என்பதனை அறியும் பொழுது வருத்தமாக உள்ளது. முதன் முதலில் மதுவிலக்கை காங்கிரஸ் கட்சிதான் தான் ஆட்சியில் இருக்கும் பொழுது கொண்டுவந்துள்ளது. அதனை திராவிடக் கட்சிகளும் ஆதரித்தன என்பதும் எல்லோர்க்கும் தெரியும். அதே நேரத்தில் திராவிடக் கட்சியான தி.மு.க. தான் மதுவிலக்கு சட்டத்தினை தளர்த்தியுள்ளது. பின்னர், மதுவினை ஓழிக்க வேண்டும் என்று சிறப்பு கட்டுரையை ஆ.விகடனில் எழுதிய எம்.ஜி.ஆர் அவர்களே தன் ஆட்சியில் மதுவிலக்குச் சட்டத்தினை தளர்த்தி, மது மொத்த விற்பனைக்கு என ஒர் அரசு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார் என்பதனை அறியும் பொழுது கொள்கை என்பது ஒர் பேச்சுத்தானா? என்ற கேள்வி எழாமல் இல்லை. பின் அவர்களே தடையும், பின்னர் திமுக அரசு தடை தளர்த்தியும் என்று நீண்ட விளையாட்டுக்கு முற்றுப்புள்ளியாய் தமிழக அரசின் ஆட்சிப்பீடத்தைப் பிடித்த செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் மதுவிலக்குச் சட்டத்தை விலக்கி விட்டு, 2001 ஆம் ஆண்டு மது விற்பனையை ஆரம்பித்துள்ளார். பின்னர், 2003 ஆம் ஆண்டு சில்லறை விற்பனையும் டாஸ்மாக் மூலம் ஆரம்பித்துள்ளார் என்பது உங்களுக்கும் தெரிந்த கதை தான்.
டாஸ்மாக்:(TASMAC)
2001-ஆம் ஆண்டு மீண்டும் மதுவிலக்குச் சட்டம் விலக்கப்பட்டு, கள் & சாராயம் போன்ற உள்நாட்டு மதுவகைகளை விடுத்து, உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகளான விஸ்கி, ரம், வோட்கா, பிராந்தி, பீர் & வைன் போன்றவற்றை டாஸ்மாக் மூலம் மொத்த விற்பனையை தொடங்கியது. சில்லறை விற்பனையை தனியார் வசம் கொடுத்து வைத்திருந்தனர். ஆனால், தனியார்க்கு சில்லறை வணிக உரிமையை ஏலம் விடுவதில் ஏற்பட்ட வருவாய் இழப்பின் காரணமாக, சில்லறை விற்பனையையும் தாமே எடுத்துச் செய்வது என்னும் முடிவினை தமிழக அரசு 2003 ஆம் ஆண்டு எடுத்தது. அதன்படி நல்ல வருவாயும் அரசுக்குக் கிடைத்தது. ஆம், தமிழக அரசு நிறுவனமாகிய டாஸ்மாக் மதுவின் மொத்தம் மற்றும் சில்லறை வணிகத்தின் ஏகபோக உரிமம் கொண்டதால் அதற்கான சுங்க வரியும், விற்பனை வரியும் முழுமையாக கிடைப்பதுடன் விற்பனை இலாபமும் முதலாளி என்ற முறையில் முழுமையாக பெறுகிறது. ஆரம்பக்கட்டத்தில் 3000 கோடி என்றிருந்த அதன் வருவாய் ஆண்டிற்கு 20% வளர்ச்சி என்ற விகிதத்தில் விற்பனை வளர்ந்து 2010-11 ஆம் ஆண்டில் அதன் வருவாய் 14,965 கோடி!!! இவ்வாண்டு அதைக்காட்டிலும் அதிகமான வருவாய் கிடைக்கும் என்று விவரம் அறிந்தவர்கள் சொல்வதும், அண்மையில் ஏற்றிய விலை உயர்வும் இதனை உறுதிபடுத்துகிறது.
அரசு என்பது மக்களுக்கான ஒர் அமைப்பு எனக் கொண்டால், அதன் ஆண்டு வருவாய் வளர்ந்து கொண்டே வருவது நல்லதுதான். அதுவும், தமிழக அரசின் மொத்த வருவாயின் சரி பாதிக்கும் சற்றே குறைவான வருவாயை இவ் டாஸ்மாக் வழங்குகிறது என்றால் இதனை இழக்க மனம் வருமா? தமிழக அரசு வழங்கி வரும் இலவசத்திற்கு டாஸ்மாக்கின் வருவாயே அச்சாணி ஆக இருக்கும் பொழுது இதனை இழக்க மனம் வருமா? ஆகையால் தான் 2003 ஆம் ஆண்டில் ஜெ.ஜெயலலிதா தொடங்கிய இதன் ராஜ்ஜியத்தை அடுத்து 2006-ஆம் ஆண்டில் ஆட்சிக்கட்டில் ஏறிய மு.கருணாநிதி அவர்களும் தொடர்ந்தார். இன்றும் தொடர்கிறது ஜெ.ஜெயலலிதா தலைமையில். ஆனால் டாஸ்மாக்கை இழந்துதான் ஆக வேண்டும் என்பதுதான் நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லது. அதற்காகவே மீண்டும் எழுப்புகிறோம் மதுவிலக்கு என்ற கோஷம்.
மதுவிலக்கு காலம்:
மதுவினால் ஏற்படும் தீங்குகளை மக்கள் அறியாமல் இல்லை. அதனை தடை செய்வதற்காக எத்தனையோ போராட்டங்கள் நம் தமிழக மண்ணில் நடந்துள்ளன. குறிப்பாக கள்ளுக்கடை ஒழிப்பு போராட்டும் நமக்குத் தெரிந்த வரலாறு. அவ்வாறாக கஷ்டப்பட்டு ஓடுக்கிய மதுவினை... மேலும் மேலும் முயற்சித்து அழிக்க வேண்டிய அரசு.. முடியாமல் மதுவிலக்கு தளர்த்தலைத்தான் கொண்டு வந்தது என்பது மிகவும் சோதனையான காலம். மதுவிலக்கு இருந்த காலத்தில் அங்காங்கு கள்ளச்சாராயம் வடிக்கப்பட்டது என்பதும் அதனால் பல மக்கள் இறந்தார்கள் என்பதும் தெரிந்தது தான். அதற்காக கள்ளச்சாரயத்தினை வேரறுப்பது விட்டு, வெளிநாட்டு மது வகைகளை குடிக்க கொடுப்பது எந்த விகிதத்தில் நியாயம்? அதுவும் சாராயம் என்பது அதில் கலக்கப்படும் நீரின் விகிதாச்சாரத்தில் ஏற்படும் குறையினால் உயிரைக் குடிக்கும் கள்ளச்சாராயம் ஆனது. மதுவினை ஒழிக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்ட நான் கள்ளுக்கும் வக்காலத்து வாங்கிப் பேசப்போவதும் இல்லை என முடிவெடுத்திட்டேன். மதுவுக்கு அடிமையானவர்கள், கள்ளத்தனமாக வடிக்கப்பட்ட சாராயத்தினை தேடி ஓடி வாங்கிச் சாப்பிட்டனர். அவ்வாறு கள் வடித்தவர்கள் எல்லாம் யார்? தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவ்வாறு தண்டிக்கப்பட வேண்டியவர்களை கொள்கை அற்று, ஓட்டு வங்கிகளுக்காக வாழ்ந்த அரசியல் தலைவர்கள் தண்டிக்க முடியாது, அவர்களை ஊருக்குள் சுதந்திரமாக உலா விட்டதும் அல்லாமல் கள் குடிப்பார்கள் மீது பழியினை இட்டு, கள் குடிப்பதனால் ஏற்படும் உயிர் இழப்பினைக் காட்டி, மீண்டும் குடிப்பார்களுக்கு என வெளிநாட்டு மதுக்கடைகளைத் திறந்தது என்பது முறையாகுமா? ஏன் இன்று மட்டும் கள்ளச்சாராயம் வடிப்பார்கள் இல்லாது போனார்கள்? எல்லாம் அரசு மதுக்கடைகள் வந்ததனாலா? அல்லது அரசின் கண்டிப்பான எச்சரிக்கையை வழிநடத்தும் போலீஸ் துறையாலா? யோசித்துப்பாருங்கள்! இன்றும் மதுபானக்கடைகளில் கிடைக்கும் மதுவைவிட மிகக் குறைந்த விலையில் நன்றாக போதை தரும் சாராயம் வடிக்க முடியும். சில இடங்களில் சாராயங்கள் வடிக்கப்பட்டு பிடிபட்டதை செய்தித்தாள்களில் படித்துக் கொண்டு தானே இருக்கிறோம். ஆகையால், கள்ளத்தனமாக சாராயம் வடிப்பது என்பது காவல் துறையால் தான் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதே தவிர, அரசு மதுவிலக்குக்கு தடை செய்து, மதுபானக்கடை நடத்துவதால் அல்ல! அதைவிட மிக முக்கியமான ஒன்று... மது தேவையையும் அதனை எப்படியும் வடித்தாவது குடித்திட வேண்டும் என்ற வெறியும் உள்ளோர் ரவுடிகள் என அழைக்கப்படுவார்கள் மட்டுமே! அவர்கள் மதுவிலக்கு இருந்தாலும் வடித்திடுவார்கள், ஏனெனில் அவர்கள் தயவு ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் என இருவர்க்கும் உள்ள மோதலுக்குத் தேவைப்படுவதால், கண்டும் காணாமல் விட்டுவிடுவர். மதுவிலக்கு இல்லை என்பதால் இவர்கள் மட்டும் தான் கள் வடித்திடாமல் இருக்கிறார்கள், இவர்கள் தேவைக்காகத்தான், தைரியத்தில் தான் கள் வடித்தலும் சட்ட விரோதமாக நடக்கிறது. பணம் என்ற தேவைக்காக யாரும் அத்தனை தைரியமாக அரசின் மதுவிலக்கினை எதிர்த்து கள் வடிக்க மாட்டார்கள். ஏனெனில் பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உள்ளது. இது இல்லை என்றால் வேறு ஒர் தொழில் இறங்கிவிடுவார்கள். அப்படித்தான் பல சிறு கள் வடிப்போர் மாறிவிட்டனர். ஆகையால் இன்று மதுவிலக்கு கொண்டு வந்தால் கண்டிப்பாக கட்டுக்குள் வைத்து மது என்ற வாடையற்ற தமிழகத்தினைப் பார்த்திடலாம்.
மதுவும் சுற்றமும்:
ஒருவர் வீட்டிற்கு பால் வாங்கி வந்தால் வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடலாம். மது வாங்கி வந்தால்? வாங்கி வந்தவர் தன் மனைவிக்கு குடிக்க கொடுப்பாரா? தன் பிள்ளைக்கு கொடுப்பாரா? இல்லை மனைவிதான் தன் கணவர் தினம் குடித்துவிட்டு வரவேண்டும் என கருதுகிறாளா? எதுவுமே கிடையாது. குடிப்பவர்கள் யவரும் தன் வீட்டில் வைத்து பிறருக்கும் ஊற்றிக் கொடுப்பதில்லை. ஏனெனில் அது தவறு வேண்டாமென்று தெரிகிறது, ஆனாலும் குடிக்கிறார்கள். போதைக்கு அடிமையாகி இருக்கிறார்கள். இப்போதை அடிமைகளைப் பார்த்து சிறுவர்களும் குடித்துக் கெட்டுப்போகும் சூழலை... 6400 மதுபானக்கடைகள் மூலம் ஊரெங்கும் மதுவினைச் விநியோகம் செய்யும் அரசுச் செயலை எந்த அம்மா ஏற்றுக் கொள்வாள்???? ஆம், இன்று மேல் நிலைப் பள்ளிகள் படிக்கும் மாணவர்கள் முதல் அதாவது 16 வயதிலேயே குடிக்க ஆரம்பிக்கும் சிறுவர்களை அங்காங்கே காண முடிவதினை பார்க்கும் பொழுது! அவனைப் பெற்றெடுத்த தாய் தன் குடிகாரன் என்ற சொல்லைக் கேட்டு எத்தனை வேதனை அடைந்திருப்பாள்!!! குடிக்காதே என்று அடித்தும் பண்பாய் சொல்லியும் கேட்காமல் மூன்றாம் நாளில் நண்பர்களோடு குடித்துவிட்டு கூத்தடிக்கும் நிலையினைக் கண்டால் ஒர் தகப்பனுக்கு எப்படியிருக்கும்??? குடித்துவிட்டு தாயை அடிக்கும் அப்பாவினைப் பார்க்கும் குழந்தையின் மனம் எத்தனை வேதனைப்படும்??? இத்தனை தெரிந்தும் தன் குடியினை மறக்க முடியாமல் குடித்துக் கெட்டுப்போகும் குடிமக்களைத் திருத்த வேண்டும் மது ஒழிப்பு. வளர்ப்பினை சரி செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தல் அல்ல!
மதுவினால் ஏற்படும் தீது:
மது என்பது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு என்பதனையும் அதனால் இளைய சமுதாயம் எத்தனை சீர்கேட்டிற்கு ஆளாகிறது என்றும் மது அடிமையாகிய ஆரோக்கியமற்ற இளைய சமுதாயத்தில் நாட்டின் முதுகெலும்பே உடைந்து போகிறது என்றெல்லாம் நான் கூற வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இதனைப் பற்றி நாளும் நாம் பிறர் மூலம் தெரிந்ததுதான். ஆகையால் மதுவிலக்கு வேண்டும் என்பதனை இன்றல்ல.. காலம் காலமாய் சொல்லி வருகிறார்கள். இன்று நாம் மது ஒழிப்பு என்பதனை உறுதி செய்ய ஒன்றுபடுவோம் என்பதுதான் தீதுக்கு எதிரான என் கோஷம்.
மது ஒழிப்பு:
இந்திய அரசியல் சாசனம் 47-ஆம் பிரிவின்படி போதைப் பொருட்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று அதன் தீது அறிந்து சொல்லிய போதும், அதனை பொருட்படுத்தாத அரசை, மது ஒழிப்பு என்ற போராட்டத்தின் மூலமாய் ஓட்டு வங்கியைக் காட்டித்தான் வெல்ல முடியும், மதுவின் தீது சொல்லி மதுவிலக்கு சட்டம் பெற முடியாது. மதுவை நாடும் மக்களையும் நாம் சொல்லித் திருத்த முடியாது. ஏன் நம் தந்தையோ! அண்ணனோ! கணவனே குடிகாரனாக இருந்தால் கூட, அருகில் உட்கார வைத்து மது குடிப்பதினால் ஏற்படும் தீதினைக் காட்டி அவர்களைத் திருத்திட முடியாது, மது ஒழிப்பு மூலம் தான் குடியிலிருந்து விடுபட வைக்க முடியும். ஆகையால், மது ஒழிப்பு என்னும் கோஷத்தை உரக்கச் சொல்லி மனதினில் நாம் கொள்கையாக கொள்வோம். மது ஒழிப்பினைக் கொள்கையாகக் கொண்டாரை குவிப்போம். குறிப்பாக பெண்களை மது ஒழிப்புக் கொள்கைக் கூட்டத்தில் சேர்த்தால் விரைவில் ஓட்டு வங்கியின் எண்ணிக்கை கூடும். ஓட்டு வங்கியால் வாழும் அரசு... மதுவிலக்குச் சட்டத்தினை ஏற்கும். மது ஒழிப்பு பிறக்கும்!!! சுற்றமும் நல்குடி வாழ்வு வாழும்.
மதுபானக்கடை ஊழியர்கள் நிலை:
மதுவிலக்கு சட்டத்தினை அரசு அமுல்படுத்தப்பட உள்ளது, டாஸ்மாக் கடைகள் எல்லாம் மூடப்பட உள்ளது என்பன போன்ற கசிவுகள் வெளிவரத் தொடங்கியதுமே! அப்படியென்றால் 6400 மதுபானக்கடையில் வேலை செய்யும் 36000 பேர்களின் நிலை என்ன? என்ற அபலக்குரல் கேட்கிறது. 36,000 குடும்பங்களைப் பேசும் நீங்கள் 36,0000 இலட்சத்திற்கும் மேற்ப்பட்ட குடிகாரர்களின் குடும்ப நிலையினை ஏன் பார்க்கவில்லை. சரி, உங்கள் பேச்சுப்படி பார்த்தாலும்...மதுக்கடைகளை மூடினால் வேறு வேலைக்குப் போய் சம்பாதிக்க முடியாத கையாளாகதவர்களா? அல்லது 70ஐத் தாண்டிய கிழவர்களா? எல்லோரும் வாலிபர்கள் தானே!! அதுவும் இழப்பது சொற்ப சம்பள வேலை தானே, உங்களுக்கு என்ன அரசு ஊழியர்கள் போல் சம்பளமா என்ன? ஒர் கதவு மூடினால் மறு கதவு திறக்கும். ஆகையால் இந்த சொற்ப சம்பளப் பணியினை விட்டுவிட்டு ஒரே மாதத்தில் வேறு பணிக்குத் தயாராகிவிடுவார்கள். ஆகையால், ஊழியர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. லாட்டரிச்சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த மாற்றுத் திறனாளிகளே தங்களை மாற்றுப் பணிக்கு தயார் படித்துக் கொண்டு வாழும் பொழுது, இவர்கள் மதுக்கடையை மூடுவதைப் பற்றி எந்த கவலையும் கொள்ளமாட்டார்கள் என்பதுதான் உண்மையிலும் உண்மை.
அரசின் வருவாய் நிலை:
அரசு ஈட்டும் மொத்தம் வருவாயில் பாதிக்கும் சற்று குறைவான அளவு பங்களிப்பு டாஸ்மாக் வருவாய் என்பது ஊர் சொல்கிறது. அதன் வருவாயில் தான் இலவசத் திட்டங்கள் மக்களுக்கு குவிகிறது என்பார், நாங்க ஸ்டெடியா இருந்தா அரசு கவிழ்ந்துவிடும் என்று கையில் போதைப்பாட்டலுடன் கூவுவது ஆளும் அரசுக்கு கவலை அளிக்கவில்லையா? இதற்கும் ஈடான வருவாய் கொடுக்கும் திட்டத்தினை தீட்ட வேண்டியதில்லை. ஆங்காங்கே அரசின் வருவாய்களை ஏப்பம் விடுபவர்களை மட்டும் பிடித்தாலே போதும், ஈடாகிவிடும். ஆகையால் புதியதாய் என்ன தொழில் செய்யலாம்.. புதியதாய் எதில் வரி போடலாம் என்று கவலை கொள்ள வேண்டவே வேண்டாம். அதிகாரிகளை கண்டிப்புடனும் ... கப்பம் வாங்கிவிட்டு அரசு வருவாய் ஏய்ப்பிற்கு உதவி புரிதலை தடுத்தாலே போதும் போதும்.
குஜராத்தும் மதுவிலக்கும்:
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் மட்டும் மதுவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, அதுவும் சிறப்பு பொருளாதார மண்டலம் என்று சில பகுதிகளைத் தவிர்த்து. இதுவும் வரவேற்க வேண்டிய விடயம் தான். இதைப்போல், தமிழகத்தில் மதுவிலக்கு இருந்த பொழுதெல்லாம், ஆந்திராவிற்கு சென்று குடித்தவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அதைப்போல் இன்றும் குறைந்த விலை என்பதற்காக பாண்டிச்சேரி சென்று மது அருந்துவோரைப் பார்த்திருக்கிறோம். ஆம், ஊர்க்கு ஊர்க்கு கிடைக்காமல் எங்கோ ஒர் இடத்தில் கிடைக்கும் பொழுது மது வெறியர்களைத் தவிர வேறு யாரும் அங்குப் போய் குடிக்கமாட்டார்கள். குறிப்பாக சிறார்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதே வரவேற்கத் தக்கதுதான். ஆனால், நம் நோக்கம் எல்லாம் மது ஒழிப்பு. ஆகையால் அதையும் தாண்டி ஓட்டு வங்கியின் பலத்தினைக் காட்டுவோம்!!! மது ஒழிப்பிற்காக!!! சட்டம் தன் இரும்பு கரத்தினால் அதனையும் ஒடுக்கும்.
தோல்வி வரலாறு படைக்குமா மதுவிலக்கு:
மது குடிக்காமல் மதுவினால் பாதிக்கப்படும் அனைவரும் ஓங்கி குரல் கொடுக்காதவரை தோல்விகள் கிடைப்பது சகஜம் தான். அதுவும், குடிப்பவர்கள் மட்டுமே நம்மை பலசாலி என்றும்... தானே பெரியவன் என்றும் பெரும் குரல் கொடுக்கும் பொழுது.. குடியர்களை ஓட்டு வங்கியின் தலைவன் என்று காணும் அரசியல் உலகம்... அவன் விரும்பும் மதுவினைக் கொடுத்து ஏமாற்றி வருகிறது. கட்சிக் கூட்டம் என்றுப் போய் பாருங்கள் பாட்டில்கள் தான் உலா வரும். ஆகையால், அவர்கள் ஒர் பொருட்டே அல்ல குடியர்களுக்கு எங்கள் ஆதரவு இல்லை. என் கணவன் இருக்கும் கட்சியாக இருந்தாலும் அவன் குடித்தால் அவன் சொல்லும் கட்சிக்கு, இருக்கும் கட்சி இடமாட்டேன், மதுவிலக்கு கட்சிக்கே என் ஓட்டு என்று பெண்கள் மற்றும் குடியாதார் சொல்ல ஆரம்பித்துவிட்டால் மது ஒழிப்பு குரல் ஓங்கிவிட்டால் மதுவிலக்கு என்ற சொல் தோல்வியை மட்டும் அல்ல சமூகத்திலிருந்தே அகற்றப்பட்டுவிடும். ஆம், மது என்ற ஒன்றே இல்லாத பொழுது மதுவிலக்கு எதற்கு?
என் கொள்கை மது ஒழிப்பு:
ஒவ்வொருவரும் மனதில் தன் கொள்கையாக மது ஒழிப்பினை எடுத்துக் கொள்வதுடன், மது ஒழிப்பு கருத்துள்ளவன் என்று சமூகத்திற்கும், அரசியல் உலகத்திற்கும் உரக்க எடுத்துரைத்தால், ஓட்டு வங்கியால் நிலை நிற்கும் அரசு நம் விருப்பத்தை ஏற்கும். ஆகையால், மதுவிலக்கு வேண்டும் என்போர் தயவு செய்து மது ஒழிப்பிற்கு ஆதரவாக இங்கு பின்னூட்டம் கொடுங்கள்.
நன்றி.