நோய்களை குணப்படுத்தும் அக்குபஞ்சர் மருத்துவம்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

நோய்களை குணப்படுத்தும் அக்குபஞ்சர் மருத்துவம்

Post by ஆதித்தன் » Sun May 27, 2018 10:47 pm

Image
அக்குபஞ்சர் என்ற மருத்துவத்தினைக் கற்றுக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதோடு, அதன் தத்துவத்தின் அடிப்படையில் எந்தவொரு நோயினையும் எதிர்கொண்டு ஆரோக்கியமாக வாழும் சிறந்த மனதினை உருவாக்கும் ஒர் செயல்பாடாக சக்தி இணை மருத்துவம் என்ற துணைக்களத்தினை உருவாக்கியுள்ளேன்.

இப்பகுதியில், நோய்கள், நோய்க்கான காரணம், நோயினை தீர்க்கும் வழிகள் மற்றும் ஆரோக்கிய வாழ்வு ஆகிய நான்கினைப் பற்றி கலந்துரையாடலாம்.

7000 வருடங்களுக்கு முன்னர் சீனாவில் ஒழுங்குப்படுத்தப்பட்ட அக்குபஞ்சர் என்ற மருத்துவம், மருந்தில்லாமல் நோய்களைக் குணப்படுத்தும் அதிசயத்தினை நீங்கள் பல்வேறு நபர்கள் மூலம் அறிந்திருக்கலாம். அவ்வாறாக நானும் யூடியுப் வழியாக அக்குப்பஞ்சர் மருத்துவத்தின் மகத்துவத்தினை அறிந்து, இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவத்துறையில் ஏற்பட்டிருக்கும் தேவைப்பாட்டின் காரணமாக நானும் அம்மருத்துவத்தினைப் படிக்கிறேன்.

அண்டமும் பிண்டமும் ஒன்றென்பர் நம் முன்னோர். அந்த ஐம்பூதத் தத்துவத்தினையே முன்னெடுத்து வைக்கிறது அக்குப்பஞ்சர் மருத்துவம்.

நிலம் - காற்று - நீர் - மரம் - நெருப்பு என ஐந்து பூதங்களாக பிரித்து, அதற்கான உடல் உள்ளுறுப்புகளாக,

நிலம் - மண்ணீரல்(SP), இரைப்பை(ST) ,
காற்று - நுரையீரல்(LU), பெருங்குடல்(LI).
நீர் - சிறுநீரகம்(K), சிறுநீர்ப்பை(UB).
மரம் - கல்லீரல்(LIV), பித்தப்பை(GB).
நெருப்பு - இதயம்(H), சிறுகுடல்(SI), இருதயமேலுறை(P), மூவெப்பமண்டலம்(TW).

இந்த ஐம்பூத உறுப்புகளை மையப்படுத்தியே நமது உடல் அமைப்பும் ஆரோக்கியமும் அமைந்துள்ளது. ஆகையால், இவற்றின் செயல்பாட்டுத் தன்மையையும் ஒன்றிற்கு ஒன்று கொண்டுள்ள பிணைப்பினையும் தெரிந்து கொண்டாலே, வருமுன் காப்போம் என்பதன் சூத்திரதாரியாக நாம் மாறிவிடலாம்.

சீன தேசம் ஒழுங்குப்படுத்திக் கொடுத்த அக்குபஞ்சர் உடல் கூறுகளுக்கான ஐம்பூதத்தில் ஆகாயம் என்பதில்லாமல், மரம் என்பதனைக் குறித்திருக்கிறார்கள்.

அக்குபஞ்சர் மருத்துவத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னன்னா, இது ஒர் செலவில்லா மருத்துவமுறை. இதன் மூலம் அனைத்து நோயினையும் குணப்படுத்த முடியும்.

ஆம், ஐம்பூதத்தினையும் கட்டுப்படுத்தும் மனம் மூலம் அனைத்து நோயினையும் ஒர் தொடுதலில் கூட குணப்படுத்த முடியும் என்பதும் இதன் சிறப்பு.

நோய்களைக் கண்டறிவதற்கு பயன்படுத்தும் நாடி பார்த்தல், வெளியுறுப்புகளின் தன்மை பார்த்தல், வெளியுறுப்புகளின் நிறம் பார்த்தல், குறை கேட்டல் ஆகியவை எந்தவொரு உபகரணமும் தேவையற்றது.

நோயினை குணப்படுத்த நம் உடலில் ஓடும் சக்தி ஓட்டப்புள்ளிகளில் தேங்கியிருக்கும் ஐம்பூதத்தன்மைகளை இல்லா இடத்திற்கு செல்ல விரல் மூலம் தொட்டு தூண்டிவிடுவதுதான். ஆகையால், இதற்கும் உபகரணம் தேவையில்லை, பெரிய செலவும் நமக்கில்லை.

ஆனால், இங்கே மனோசக்தி என்ற ஒன்று செயலில் இயங்குகிறது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

அக்குபஞ்சர் என்ற சிறந்த பாரம்பரிய மருத்துவமுறையினை அடுத்தடுத்து தொடர்ச்சியாக அதன் முழுமையினையும் கற்க முயல்வதோடு, மனதினை ஆரோக்கியத்திற்கு தயார் செய்வோம்.

தொடரும்.....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Acupuncture - யின்-யாங் பண்பும் உறுப்புகளும்

Post by ஆதித்தன் » Tue May 29, 2018 6:02 am

அக்குபஞ்சர் மருத்துவம் என்பது பஞ்ச பூதங்களை மையப்படுத்தி செயல்படுத்தப்படுகிறது என்று கூறினேன். ஆனால், அந்தப் பஞ்சபூதங்களை படைத்தது இறைசக்தி என்பதும், அந்த இறைசக்தி சிவசக்தியாய் ஆணும் பெண்ணுமாய் உள்ளது என்பதும் நாம் அறிந்த ஒன்றே.

இறைசக்தி, படைத்தல் - காத்தல் - அழித்தல் என மூன்று தொழிலை சிறப்பாகச் செய்யுமானால் எல்லாம் நலம்.

நம் உடலிலும் எப்பொழுதும் படைத்தல் காத்தல் அழித்தல் என மூன்று தொழில்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அதில் அடிப்படை தொழிலைச் செய்யும் முதன்மை ஆக்கச் சக்தி உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகளே நோய் ஆகும். அவற்றினை பஞ்சபூத இயக்கச் சக்தி ஓட்டங்களின் வழியில் தேங்கியிருக்கும் சக்தியினை, குறைபாடுள்ள உறுப்பிற்கு தேவையானதினை கைகளால் அழுத்தி தூண்டி அனுப்பிவிடுவதன் மூலம் குறைகளை தீர்க்கலாம்.

சீனத்தில் ஒழுங்குப்படுத்தப்பட்ட அக்குப்பஞ்சர் மருத்துவத்தில் சிவசக்தி, யின் -யாங்க் என குறிக்கப்பட்டுள்ளது.

யின் என்பது பெண் தன்மை, கருப்பு நிறம், இரவு, எதிர்மறை, குளிர், இடது , கெட்டியான உருவம், மேல் நோக்கிய சக்தி ஓட்டம் என குணங்களைக் கொண்டது.

யாங்க் என்பது ஆண் தன்மை, வெள்ளை நிறம், பகல், நேர்மறை, வெப்பம், வலது, நெகிழும் பை, கீழ் நோக்கிய சக்தி ஓட்டம் போன்ற உருவம் என குணங்களைக் கொண்டது.

அவனில்லாமல் ஒர் பொருளும் அசையாது என்பது போல, யின்-யாங்க் இயக்கம் இல்லாமல் உடல் இயக்கம் இல்லை என்றுச் சொல்லலாம். யின் யாங்காகவும், யாங்க் யின்னாகவும் மாறி மாறி பிணைந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது.

முந்தைய பதிவில், உள்ளுறுப்புகளை ஐந்து பூதங்களாகப் பிரித்தோம். அதில் ஒவ்வொரு பூதமும், யின் உறுப்பு, யாங்க் உறுப்பு என இரண்டையும் கொண்டுள்ளன. யின்னும் யாங்கும் இணைந்தே சீரான இயக்க ஓட்டத்தினை கொடுக்கிறது. யின் - யாங்க் என உறுப்புகளைப் பிரித்தாலும், யின்னுக்குள்ளும் சிறிய அளவில் யாங்க் உள்ளது, யாங்க்குள்ளும் சிறிய அளவில் யின் உள்ளது.

நிலம் பூதத்தின் யின் உறுப்பு - மண்ணீரல்(SP) , யாங் உறுப்பு - இரைப்பை (ST)

காற்று பூதத்தின் யின் உறுப்பு - நுரையீரல் (LU) , யாங் உறுப்பு - பெருங்குடல் (LI)

நீர் பூதத்தின் யின் உறுப்பு - சிறுநீரகம் (K) , யாங் உறுப்பு - சிறுநீர்ப்பை (UB)

மரம் பூதத்தின் யின் உறுப்பு - கல்லீரல் (LIV) , யாங் உறுப்பு - பித்தப்பை (GB)

நெருப்பு பூதத்தின் யின் உறுப்புகள் - இதயம் (H) & இதய உறை (P) , யாங் உறுப்புகள் - சிறுகுடல் (SI) & மூவெப்ப மண்டலம் (TW)


ஐம்பூதங்களின் 12 உறுப்புகளுக்கும் தனித்தனியாக இயக்க சக்தி ஓட்டப் பாதைகள் உள்ளன. மேலும், இனவிருத்தி சக்தி ஓட்டப் பாதை என பாலுறுப்பினை மையப்படுத்தி ஒர் சக்தி ஓட்டப் பாதையும்(REN), ஆளுமை சக்தி ஓட்டப் பாதை என மூளையை மையப்படுத்தி ஒர் சக்தி ஓட்டப்பாதையும் (DU) என மொத்தம் 14 இயக்கச் சக்தி ஓட்டப் பாதைகள் உள்ளன.

REN - யின் சக்தி ஓட்டப் பாதை, DU - யாங் சக்தி ஓட்டப் பாதை.

யின் இல் 7 , யாங் இல் 7 என சரி பாதியாக சக்தி ஓட்டப்பாதைகள் பிரிந்துள்ளன.

72000 நாடிகள் நமது உடலில் உள்ளது என்று முன்னோர் கூறியது போல, பல்லாயிரக்கணக்கான அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளது என கூறப்படுகிறது. ஆனால் தற்பொழுது, 361 புள்ளிகள் மட்டுமே மேல் கூறிய 14 சக்தி ஓட்டப்பாதைகளில் குறிப்பாக நமக்குக் கிடைக்கிறது. தேவைப்பாட்டின் காரணமாக பயன்படுத்தப்பட்ட புள்ளிகள் மட்டுமே காலத்தில் எஞ்சியிருக்கிறது என்றுக் கூட சொல்லலாம். ஆனால், நாம் அக்குப்பஞ்சர் மருத்துவத்தில் சக்தி ஓட்டத்தில் அமைந்துள்ள ஐம்பூதப் புள்ளிகள் 60 -யைக் கொண்டே பெரும்பான்மையாக அனைத்து நோய்களையும் குணப்படுத்திட முடியும் என்றும் இன்றைய அக்குபஞ்சர் ஆசான்கள் கூறுவது. ஆகையால், தத்துவத்தின் அடிப்படையில் இம்மருத்துவத்தினை புரிந்து படிக்க ஆரம்பித்தீர்கள் என்றுச் சொன்னால், ஐந்து பூதத்திற்கும் ஒவ்வொரு புள்ளி என்று ஐந்து புள்ளிகளின் அடிப்படையில் கூட சிறந்தளவில் உடல் இயக்கச் சக்தியினை சீர் செய்ய முடியும் என்பதனை ஆசான்கள் விளக்கிக் கூறியுள்ளனர் என்பதனை கடைசியில் தெரிந்து கொள்ள முடியும். ஆகையால் அக்குபஞ்சர் மருத்துவம் என்பது உடலில் உள்ள 361 புள்ளிகளையும் மையமாகக் கொண்டது என்று பெரியதாக கடினமாக இருக்கும் என்று எண்ண வேண்டாம்.

அக்குபஞ்சர் மருத்தவத் தத்துவத்தினை உள்வாங்கிக் கொண்டால் மிகவும் எளிதானதும், பாதுகாப்பானதும், ஆரோக்கியத்தினை மேன்மைப்படுத்தும் சிறந்த செலவில்லா மருத்துவம் ஆகும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

அக்குபங்சர் உறுப்புகளின் சக்தியோட்டப் புள்ளி எண்ணிக்கை

Post by ஆதித்தன் » Tue May 29, 2018 12:42 pm

Image

361 அக்குபங்சர் புள்ளிகள் உள்ளன. அவை,

மண்ணீரல் (SP) - 21
இரைப்பை (ST) - 45

நுரையீரல் (LU) - 11
பெருங்குடல் (LI) - 20

சிறுநீரகம் (KI) - 27
சிறுநீர்ப்பை (BL) - 67

கல்லீரல் (LR) - 14
பித்தப்பை (GB) - 44

இதயம் (HT) - 9
இதய மேலுறை (PC) - 9
சிறுகுடல் (SI) - 19
மூவெப்ப மண்டலம்(TE/SJ) - 23

இனவிருத்திப் பாதை(RN/CV) - 24
ஆளுமைப்பாதை (DU/GV) - 28

உறுப்பு ரீதியாக ஒவ்வொரு உறுப்பின் சக்தி ஓட்டப் பாதையிலும் எத்தனை அக்குபங்சர் புள்ளிகள் உள்ளது என மேல் கொடுத்துள்ளேன். இவை, SP1,SP2, SP3 ..... ST1,ST2,ST3....... LU1, LU2, LU3..... என்ற முறையில் எளிதாக 361 புள்ளிகளுக்கும் தனித்தனி பெயர் சூட்டப்பட்டு, அவை உடலில் இருக்குமிடம் நமக்கு குறிப்பிட்டு கொடுக்கப்பட்டுள்ளன.

யின் உறுப்பு புள்ளிகள் மொத்தம் 115 மற்றும் யாங் உறுப்பு புள்ளிகள் மொத்தம் 246 உள்ளன.

ஒவ்வொரு புள்ளியும் ஏதேனும் ஒர் பூதத்தின் சக்தியினை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. நோய் என்பதே உள்ளுறுப்புகளின் குறைபாடுகளே ஆகும், ஆகையால், குறைபாடுள்ள உள்ளுறுப்பினை நாடி பார்க்கும் முறையிலும், உடலின் வெளி உறுப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் விசாரனை மூலம் அறிந்து தகுந்த உள்ளுறுப்பின் சக்தி ஓட்டப்பாதையில் தேவையான பஞ்சபூத புள்ளியினை அழுத்தம் கொடுத்து, அவ்விடத்தில் நாடித்துடிப்பினை சரி செய்வதன் மூலம் நோய் குணப்படுத்தப்படுகிறது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

உள்ளுறுப்புகள் அமைவிடமும் பூதத்தின் புற உறுப்பும்

Post by ஆதித்தன் » Thu May 31, 2018 2:53 pm

Image

உறுப்புகள் உடலில் அமைந்துள்ள பகுதி படத்தில் காட்டப்பட்டுள்ளது, நெஞ்சுப் பகுதியில் நுரையீரல் ( காற்று ) மற்றும் இருதயம் (நெருப்பு) அமைந்துள்ளது. அடுத்து உதரவிதானம்(Diaphragm) கீழ் கல்லீரல் (மரம்) , இரைப்பை ( மண்) மற்றும் அதற்கு கீழ் பின்பகுதியில் சிறுநீரகம் ( நீர்) அமைந்துள்ளது. இவற்றின் துணை உறுப்புகளும் அதன் அருகாமையிலேயே அமைந்துள்ளன. துணை உறுப்பான சிறுகுடல் வயிற்றின் மத்தியில் அமைந்துள்ளது, சிறுநீர்ப்பை முன்பக்கமாக எல்லாவற்றிற்கும் கீழே அமைந்துள்ளது. மூவெப்பமண்டலம் மட்டும் உறுப்பு இல்லை.

அக்குபங்சர் மருத்துவத்தில் நோய்களுக்கான சிகிச்சை மட்டுமில்லாமல், ஆரோக்கிய வாழ்விற்கான வருமுன் காப்போம் தகவலும் நிறையவே கொடுக்கப்பட்டுள்ளன. நமது தினசரி பழக்க வழக்கங்களையும் உணவுமுறையையும் அக்குபஞ்சர் மருத்துவத்தின் நோய்க்கான காரண & சிகிச்சை துணுக்குகளைப் படித்து சரி செய்துவிட்டாலே போதும், ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. நமது உடலின் உள்ளுறுப்புகளின் பிரதிபலிப்பாக வெளியுறுப்பாக முகத்தில் அமைந்துள்ளது என்பது உண்மை. காதில் பிரச்சனை வருகிறது என்றால், சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதனை புரிந்து கொள்ளலாம். அதைப்போல் கண்ணில் பிரச்சனை உருவாக ஆரம்பித்தது என்றால், கல்லீரலில் பிரச்சனை இருக்கிறது என்பதனை புரிந்து கொள்ளலாம். இவ்வாறு ஐந்து பூதங்களது பிரச்சனைகளை வெளிக்காட்டும் அமைப்பாக முகத்தில் உள்ள உறுப்புகள் அமைந்துள்ளது. அவை,

நிலம் பூதம் வெளியுறுப்பு - உதடு (வாய்)
காற்று பூதம் வெளியுறுப்பு - மூக்கு
நீர் பூதம் வெளியுறுப்பு - காது
மரம் பூதம் வெளியுறுப்பு - கண்
நெருப்பு பூதம் வெளியுறுப்பு - நாக்கு

ஐம்பூதங்களுக்கும் நிறமும் ஒர் அடையாளம் ஆகும். அவை,

நிலம் பூதம் நிறம் - மஞ்சள்
காற்று பூதம் நிறம் - வெள்ளை
நீர் பூதம் நிறம் - கருப்பு
மரம் பூதம் நிறம் - பச்சை
நெருப்பு பூதம் நிறம் - சிகப்பு

நகம் மஞ்சள் நிறமாக மாறுவது, கண்ணில் சிகப்பு நிறம் தெரிவது, கண்ணைச் சுற்றி கருவட்டம், வாந்தியின் நிறம் என நிறங்களைக் கொண்டும் பாதிக்கப்பட்டிருக்கும் பூதத்திற்கு சிகிச்சை கொடுத்து நோயினை தீர்க்கலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

உள்ளுறுப்புகள் அண்ட சக்தியினை கிரகிக்கும் நேரம்

Post by ஆதித்தன் » Thu May 31, 2018 7:59 pm

தினம் 12 உள்ளுறுப்புகளும் தலா 2 மணி நேரம் என்று எடுத்துக் கொண்டு அந்த நேரத்தில் அண்டச் சக்தியினை கிரகித்து பிண்டத்திற்கு கொடுக்கின்றன. ஆகையால் அந்த நேரத்தினை அவற்றிற்கான நேரமாக நாம் சரியாக பயன்படுத்தினால் ஆரோக்கிய வாழ்வு நிச்சயம். அண்டச் சக்தியினை கிரகிக்கும் நேரத்தில் அந்த உறுப்பு சம்பந்தமான நோய்கள் இருந்தால் அந்த நேரத்தில் சிகிச்சை கொடுப்பது நலம்.

2 மணி நேரத்தில் 1 மணி நேரம் உறுப்பு அதன் செயல்பாட்டுக்கும், மீத 1 மணி நேரத்தினை அனைத்து உறுப்புகளுக்கும் என சக்தியினை கிரகித்துக் கொடுக்கிறது.

உறுப்புகள் அண்ட சக்தியினை கிரகித்து சிறப்பாக இயங்கும் நேரம்:

அதிகாலை 3 - 5 நுரையீரல்
காலை 5 - 7 பெருங்குடல்
காலை 7 - 9 வயிறு
காலை 9 - 11 மண்ணீரல்

முன்மதியம் 11 - 1 இதயம்
மதியம் 1 - 3 - சிறுகுடல்

முன்மாலை 3- 5 சிறுநீர்ப்பை
மாலை - 5 - 7 சிறுநீரகம்

இரவு 7 - 9 இருதய மேலுறை
இரவு 9 - 11 மூவெப்பமண்டலம்

நள்ளிரவு 11-1 பித்தப்பை
பின்னிரவு 1-3 கல்லீரல்

நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவர்களுக்கு ரொம்ப நல்லாவே தெரியும்..... வெளியிட்ட காற்று உள்ளே வரலன்னா உயிர் போச்சுன்னு. அந்த காற்றில் நிறைய சக்தியும் இருக்கிறது. ஆகையால், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான நல்ல சக்தியினை அதிகமாக கிரகித்துக் கொள்ள வேண்டும் என்றால், அதிகாலை 3 மணிக்கு விழித்து 1 மணி நேரம் மூச்சுப் பயிற்சி செய்து கொள்ளுங்கள்.

அதிகாலை முழித்துவிட்டாலே அடுத்ததாக நிகழ வேண்டிய கழிவு நீக்கப் பணியினை பெருங்குடல் தன் நேரத்தில் சரியாக சக்தியினை கிரகித்து செய்யும் பணியினை செம்மையாக செய்துவிடும்.

காலையில் நன்றாக வயிற்றுக்கு சாப்பிடுங்கள். தேவையான அளவு மதியத்திற்குள் செரிமானத்திற்கு அதிகம் நேரம் எடுக்கும் உணவுகளை சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.

மண்ணீரல் இரத்தத்தினை உள்வாங்கி அதில் இருக்கும் முதிர்ந்த இரத்த அணுக்களை அழிக்கும் செயல், இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக்களை போக்கும் செயல் போன்ற முக்கிய பணியினை செய்கிறது. ஆகையால், இதன் நேரத்தில் இது சிறப்பாக சக்தியினை உட்வாங்கிக் கொள்ள சின்ன ஓய்வினை எடுத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் இரத்தம் சுத்தமாகவும் இளமையாகவும் ஆக்கப்படுகிறது. மனமும் இளமையாகிவிடும்.

இருதயம் தன் நேரத்தில் மண்ணீரல் மூலமாக இளமையாக்கப்பட்ட இரத்தத்தினை உடல் முழுவதும் பரப்பி நம் உடல் ஆரோக்கியத்தினை வளமைப்படுத்துகிறது.

சிறுகுடல் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை இரத்த நாளங்களில் சேர்க்கிறது, இவை இரத்தம் மூலம் பிற உறுப்புகளுக்கு கடத்தப்படுகிறது. தேவைக்கு அதிகமான ஊட்டச்சத்து கிளைக்கோஜனாக கல்லீரலால் மாற்றப்பட்டு உடலில் சேகரிக்கப்படுகிறது. கழிவுகளை பெருங்குடலுக்குள் தள்ளுகிறது.

சிறுநீர்ப்பை தன் பையில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றம் செய்து சுத்தம் செய்து தயாராகிக் கொள்கிறது.

சிறுநீரகம் இரத்ததில் கலந்திருக்கும் கழிவுகளை சிறுநீராக பிரித்தெடுத்து சிறுநீர்ப்பைக்கு அனுப்பி வெளியேற்றுகிறது.

இயக்க மையமாகி ஓயாது செயல்பட்டுக் கொண்டிருக்கும் இருதயத்தினை பாதுகாத்துக் கொண்டிருக்கும் இருதயமேலுறை செயல்பாட்டு நேரம், மகிழ்ச்சியாக இருங்கள்.

மூவெப்ப மண்டலம் உடல் வெப்பத்தினை சரிசெய்து அனைத்து உறுப்புகளுக்கும் புத்துணர்ச்சி ஏற்பட செயல்படுவது. இந்த நேரத்தில் உறங்குவது மிக்க நல்லது. ஆரோக்கியம் பலப்படும்.

பித்தப்பை உணவு செரிமானத்திற்கான முக்கிய திரவங்களை சேகரித்துக் கொடுப்பது. இது தன் அண்டச்சக்தி கிரகிக்கும் வேலையை இரவில் தூங்கும் பொழுது செய்கிறது.

கல்லீரல் ஒர் மிகச்சிறந்த இராசாயன ஆலை. உடல் ஆரோக்கியத்திற்கு இதன் பணி மிக முக்கியமானது. நாம் என்னச் சாப்பிட்டாலும் கல்லீரலின் பரிசோதனைக்குப் பின்னரே ஊட்டச்சத்து சர்க்கரையாக இரத்தத்தில் தேவையான அளவு சேர்க்கப்படுகிறது கூடுதல் மேலும் ஓடுக்கி சேமிக்கப்படுகிறது. தேவையற்றவைகளை அதன் வீரியத்தினை ஓடுக்கி கழிவாக்கி சிறுநீரகத்திற்கு அனுப்புகிறது. உடலின் காவல்காரனாக விளங்கும் கல்லீரலும் நாம் தூங்கிக் கொண்டிருக்க வேண்டிய நேரத்தில் தனக்கான அண்டசக்தியினை கிரகித்து சிறப்பாக பணியினைச் செய்ய தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது.

எல்லா உறுப்புகளும் எல்லா நேரங்களிலும் பணி செய்து கொண்டிருக்கின்றன என்றாலும், அந்தந்த உறுப்புகளுக்கான அண்டச்சக்தி கிரகிப்பு நேரத்திற்கு தகுந்தவாறு நமது பழக்கவழக்கங்களை அமைத்துக் கொண்டால் ஆரோக்கிய வாழ்வு. குறிப்பாக, காலையில் எழுவது, உணவு உட்கொள்வது, இரவில் தூங்குவது ஆகிய மூன்றினை சரியாக கடைப்பிடித்தால் எப்பொழுதும் நமக்கு காப்பு.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

அக்குபங்சர் சக்தி ஓட்டப் பாதைகள்

Post by ஆதித்தன் » Fri Jun 01, 2018 2:31 pm

மொத்தம் 14 அக்குபஞ்சர் இயக்கச் சக்தி ஓட்டப் பாதைகள் உடலில் அமைந்துள்ளது. இதனை யின் - யாங் என இரண்டாகப் பிரித்தோம். அடுத்து, உதரவிதானத்துக்கு மேல் இருக்கும் தரைக்கு மேலான பூதங்களான காற்று & நெருப்பு ஆகிய உறுப்புகளின் 6 சக்தி ஓட்டப்பாதையினை ஒர் குழுவாகவும், மீத மூன்று பூதங்களின் 6 சக்தி ஓட்டப் பாதைகளை ஒர் குழுவாகவும் பிரித்துக் கொள்ளுங்கள். இவ்வாறு பிரித்துக் கொண்டால் மிக எளிதாக உடலில் சக்தி ஓட்டப்பாதை அமைந்துள்ள விதத்தினை நினைவில் வைத்துக் கொள்ளலாம்.

உதரவிதானத்துக்கு மேலிருக்கும் காற்று - நெருப்பு சம்பந்தப்பட்ட 6 சக்தி ஓட்டப்பாதைகள் கைகளில் இருக்கும், உதரவிதானத்துக்கு கீழிருக்கும் நீர்,மரம்,மண் சம்பந்தப்பட்ட 6 சக்தி ஓட்டப்பாதைகள் கால்களில் இருக்கும்.

அடுத்து, யின் சம்பந்தப்பட்ட சக்தி ஓட்டப்பாதை முன்புறமாக இருக்கும், யாங் சம்பந்தப்பட்ட சக்தி ஓட்டப்பாதை பின்புறமாக இருக்கும்.

யின் சக்தி ஓட்டப்பாதை கீழிருந்து மேல் நோக்கிய ஓட்டமாக இருக்கும், யாங் சக்தி ஓட்டப்பாதை மேலிருந்து கீழ் நோக்கிய ஓட்டமாக அமையும். உடலுக்கு கால் தான் கீழ், கைதான் உச்சம்.

கைகளில் ஓடும் 3 யின் சக்தி ஓட்டப்பாதைகள் முடிவாக இருக்கும், 3 யாங் சக்தி ஓட்டப்பாதைகள் தொடக்கமாக இருக்கும்.

கால்களில் ஓடும் 3 யின் சக்தி ஓட்டப்பாதைகள் தொடக்கமாக இருக்கும், 3 யாங் சக்தி ஓட்டப்பாதைகள் முடிவாக இருக்கும்.

கையில் தொடங்கும் மூன்று யாங் சக்தி ஓட்டப்பாதைகள்,

பெருங்குடல் (LI) - LI-1 ஆட்காட்டி விரல்
சிறுகுடல் (SI) - SI-1 சுண்டுவிரல்
மூவெப்பமண்டலம் (TW) - TW-1 மோதிரவிரல்

கையில் முடியும் மூன்று யின் சக்தி ஓட்டப்பாதைகள்,

நுரையீரல் (LU) - LU-11 பெருவிரல்
இருதயம் (H) - H-9 சுண்டுவிரல்
இருதயமேலுறை (P) - P-9 நடுவிரல்

Image

காலில் தொடங்கும் மூன்று யின் சக்தி ஓட்டப்பாதைகள்

மண்ணீரல் (SP) - SP-1 கால் பெருவிரல் வெளிப்புறம்
கல்லீரல் (LIV) - LIV-1 - கால் பெருவிரல் உட்புறம்
சிறுநீரகம் (K) - K-1 கால் பாதத்தின் மத்தி.

காலில் முடியும் மூன்று யாங் சக்தி ஓட்டப்பாதைகள்

இரைப்பை (ST) - ST-45 மெட்டி விரல்
பித்தப்பை (GB) - GB-44 கால் சுண்டுவிரலுக்கு அடுத்த விரல்
சிறுநீர்ப்பை (UB) - UB-67 கால் சிறுவிரல்

Image
Image
REN முன்புறமாக மூலாதரத்தில் தொடங்கி மத்தியமாக சென்று கீழ் உதட்டில் முடிகிறது.
DU பின்புறமாக தண்டுவடத்தில் கீழ் தொடங்கி,மத்தியமாக தலையைத்தாண்டி மேல் உதட்டில் சென்று முடிகிறது.

Image

ஒவ்வொரு சக்தி ஓட்டப்பாதையிலுமாக சேர்த்து மொத்தம் 361 அக்குபஞ்சர் புள்ளிகள் இருக்கிறது என்றுப் பார்த்தோம். இங்கே குறிப்பாக 12 புள்ளிகள் எந்த இடத்தில் இருக்கிறது என்பதற்கான முன்னோட்ட சிந்தனையை கூறியுள்ளேன். இந்த 12 முனைப் புள்ளிகளும் Jing-Well புள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன. ஏதேனும் உறுப்பில் பிரச்சனை என்ற பொழுது, அதன் முனைப் புள்ளியான ஜிங்-வெல் புள்ளியை தூண்டினால் அதன் சக்தி ஓட்டம் முழுவதுக்குமான தூண்டல் அனுப்பப்படும் ... அதாவது பைப்பின் ஒர் முனையில் ஊதினால் அடுத்த முனை வரை காற்று வரும் என்பது போல.. ஒர் முனையில் தூண்டப்படும் பொழுது அதன் எதிர்முனை வரை சக்தி ஓட்டம் சீரடையும். ஆகையால் இப்புள்ளிகளை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த அளவில் முக்கியமான 60 புள்ளிகளைப் பற்றி பார்க்கலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

அக்குபஞ்சர் பஞ்சபூதப்புள்ளிகள் 60

Post by ஆதித்தன் » Wed Jun 06, 2018 5:40 pm

அக்குபஞ்சர் மருத்துவத்திற்கு 60 புள்ளிகள் முக்கியமான புள்ளிகளாக கருதப்படுகின்றன. அவை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். ஆகையால் அதனை எளிதாக மனதில் பதிந்து கொள்ளும் விதமாக ஒர் சின்ன விளக்கத்தினைப் பார்ப்போம்.

12 உறுப்புகளுக்கும் 12 சக்தி ஓட்டப்பாதைகள். ஒர் சக்தி ஓட்டத்திற்கு ஐந்து புள்ளிகள் வீதம் 12 சக்தி ஓட்டப்பாதைக்கு 60 புள்ளிகள்.

கையில் 3 தொடக்கம் - 3 முடிவு என ஆறு சக்தி ஓட்டப்பாதைகள், காலில் 3 தொடக்கம் - 3 முடிவு என ஆறு சக்தி ஓட்டப்பாதைகள் என 12 சக்தி ஓட்டப்பாதை புள்ளிகள் எங்கு அமைந்துள்ளன என்று கடந்த பதிவில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக தற்பொழுது, ஒவ்வொன்றிற்கும் ஐம்பூதப்புள்ளிகள் ஐந்து என 60 புள்ளிகளை கையிலும் காலிலும் பார்க்க இருக்கிறோம்.

அக்குபஞ்சர் புள்ளிகள் உடல் எல்லாம் இருந்தாலும், கையிலும் காலிலும் அமைந்துள்ள இந்த 60 ஐம்பூதப்புள்ளிகளைக் கொண்டு எளிமையான மருத்துவம் பார்க்கப்படுகிறது.

ஐம்பூதங்களிலும் ஒர் வரிசைச் சுழற்சி இருக்கிறது... அதாவது, நிலம் > காற்று > நீர் > மரம் > நெருப்பு ..... அடுத்து நெருப்புக்கு பின் நிலம் > காற்று > நீர் > மரம் > நெருப்பு > நிலம் > காற்று > நீர் > மரம் > நெருப்பு என்று ஒர் சுழற்சியான சக்தி பரிமாற்ற ஓட்டம் இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

யின் முடிவு மரம், யாங் ஆரம்பம் காற்று என்பதனை குறித்துக் கொள்ளுங்கள்.

கையில் உள்ள 30 ஐம்பூதப் புள்ளிகள் :

Image

கையில் வெளிப்புறம் ஆரம்பமாகும் யாங் சக்தி ஓட்டப்பாதையான பெருங்குடல் ஐம்பூதப்புள்ளிகள் - LI-1 (காற்று) > LI-2(நீர்) > LI-3 (மரம்) > LI-5 (நெருப்பு) > LI-11 (மண்)
கையில் ஆரம்பமாகும் யாங் சக்தி ஓட்டப்பாதையான சிறுகுடல் ஐம்பூதப்புள்ளிகள் - SI-1 (காற்று) > SI-2(நீர்) > SI-3 (மரம்) > SI-5 (நெருப்பு) > SI-8 (மண்)
கையில் ஆரம்பமாகும் யாங் சக்தி ஓட்டப்பாதையான மூவெப்பமண்டல ஐம்பூதப்புள்ளிகள் - TW-1 (காற்று) > TW-2(நீர்) > TW-3 (மரம்) > TW-6 (நெருப்பு) > TW-10 (மண்)

Image

கையில் உட்புறம் முடியும் யின் சக்தி ஓட்டப்பாதையான இதயம் ஐம்பூதப் புள்ளிகள் - H-9 (மரம்) > H-8(நெருப்பு) > H-7 (மண்) > H-4 (காற்று) > H-3 (நீர்)
கையில் உட்புறம் முடியும் யின் சக்தி ஓட்டப்பாதையான இதயமேலுறை ஐம்பூதப் புள்ளிகள் - P-9 (மரம்) > P-8 (நெருப்பு) > P-7 (மண்) > P-5 (காற்று) > P-3(நீர்)
கையில் உட்புறம் முடியும் யின் சக்தி ஓட்டப்பாதையான நுரையீரல் ஐம்பூதப் புள்ளிகள் - LU-11 (மரம்) > LU-10 (நெருப்பு) > LU-9 (மண்) > LU-8 (காற்று) > LU-5 (நீர்)

காலில் உள்ள 30 ஐம்பூதப் புள்ளிகள்:

Image

காலில் உட்புறம் தொடங்கும் யின் சக்தி ஓட்டப்பாதையான சிறுநீரகம் ஐம்பூதப் புள்ளிகள் - K-1 (மரம்) > K-2 (நெருப்பு) > K-3 (மண்) > K-7 (காற்று) > K-10 (நீர்)
காலில் உட்புறம் தொடங்கும் யின் சக்தி ஓட்டப்பாதையான மண்ணீரல் ஐம்பூதப் புள்ளிகள் - SP-1 (மரம்) > SP-2(நெருப்பு) > SP-3 (மண்) >SP-5 (காற்று) > SP-9(நீர்)
காலில் உட்புறம் தொடங்கும் யின் சக்தி ஓட்டப்பாதையான கல்லீரல் ஐம்பூதப் புள்ளிகள் - LV-1 (மரம்) > LV-2 (நெருப்பு) > LV-3(மண்) > LV-4 (காற்று) > LV-8 (நீர்)

Image

காலில் வெளிபுறம் முடியும் யாங் சக்தி ஓட்டப்பாதையான சிறுநீர்ப்பை ஐம்பூதப் புள்ளிகள் - UB-67 (காற்று) > UB-66 (நீர்) > UB-65 (மரம்) > UB-60 (நெருப்பு) > UB-40(மண்)
காலில் வெளிபுறம் முடியும் யாங் சக்தி ஓட்டப்பாதையான பெருங்குடல் ஐம்பூதப் புள்ளிகள் - ST-45 (காற்று) > ST-44 (நீர்) > ST-43(மரம்) > ST-41 (நெருப்பு) > ST-36(மண்)
காலில் வெளிபுறம் முடியும் யாங் சக்தி ஓட்டப்பாதையான பித்தப்பை ஐம்பூதப் புள்ளிகள் - GB-44(காற்று) > GB-43(நீர்) > GB-41(மரம்) > GB-38(நெருப்பு) > GB-34 (மண்)


ஐம்பூதப் புள்ளிகள் அறுபதையும் மனதில் கொள்வது என்பது எளிதான காரியம் தான். கையில் முன்பக்கமாக ஓடும் மூன்று சக்தி ஓட்டப்பாதையிலும் வரிசையாக ஒவ்வொரு பூதமும் உள்ளது... அதைப்போலவே பின்பக்கமாக எனத் திருப்பிக் கொண்டால் அடுத்த 15 பூதப் புள்ளிகள் என 30 புள்ளிகளை நினைவில் கொண்டால்... அதைப்போலவே காலிலும் 30 புள்ளிகளையும் எளிதாக மனதில் பதியவைத்துக் கொள்ளலாம்.

மேல் உள்ள படத்தில் குறிக்கப்பட்ட புள்ளிகள் உடலில் எந்த இடத்தில் சரியாக வரும் என்பதனை அடுத்தடுத்து வரும் பதிவுகளில் ஏதேனும் ஒர் புள்ளி என குறிப்பிட்டு சரியான அங்க அடையாளப்படம் கொடுக்கப்படும்.. ஆகையால் இப்போதைக்கு ஒர் குறிப்பு எடுத்துக் கொண்டால் அடுத்தடுத்து தெளிவாக ஐம்பூதப்புள்ளிகளை பதியவைத்துவிடலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

அக்குபங்சர் 12 உறுப்புகளின் நாடிப்புள்ளிகள் இருக்குமிடம்

Post by ஆதித்தன் » Sun Jun 10, 2018 12:46 pm

Image
அக்குபஞ்சர் மருத்துவத்தில் நாடி பார்த்தல் என்பது மிக முக்கியமானது ஆகும். நமது எண்ணத்தினை ஒருமைப்படுத்தி நோயாளியின் நாடியினை தெளிவாக கணித்து குறைபாடினை அறிந்து கொள்ள கட்டாயம் பழகிக் கொள்ள வேண்டும்.

12 உறுப்புகள் - 12 நாடிகள்.

ஒர் புள்ளியில் ஒர் பூதம், ஒர் புள்ளிக்கு இரண்டு உறுப்புகள் - இரண்டு நாடி வீதம் இடது கையில் 3 புள்ளிகள் - 6 நாடி , வலது கையில் 3 புள்ளிகள் - 6 நாடி என 12 அக்குபஞ்சர் நாடிகள்.

காலில் தாழ்வான பகுதி கால் பாதம்-விரல், கையில் உயர்வான பகுதி கை விரல். ஆகையால், கையில் கீழிலிருந்து மேலாக என்றுச் சொன்னால், விரல் நோக்கிய திசை ஆகும். காலில் மேலிருந்து கீழாக என்றுச் சொன்னால், கால் விரல்கள் நோக்கிய திசை ஆகும்.

பூதங்கள் ஒர் சுழற்சி முறையில் ஒன்றிலிருந்து ஒன்றாக மாற்றம் ஆகும். அதன் சுழற்சி வரிசை, நிலம் > காற்று > நீர் > மரம் > நெருப்பு ஆகும்.

எ.கா: நீர் > மரம் > நெருப்பு > மண்/நிலம் > காற்று >நீர் > மரம் > நெருப்பு > மண் > காற்று > நீர்

பூதங்கள் யின் & யாங் என இரண்டு வித உறுப்புகளையும் கொண்டுள்ளன. யாங் உறுப்புகள் மென்மையாக நெகிழ்ந்து கொடுக்கும் உறுப்பாக இருக்கும் ஆகையால் இவை மேல் நாடியாகவும், யின் உறுப்புகள் கெட்டியான உறுப்பாக இருக்கும், ஆகையால் இவை கீழ் நாடியாகவும் ஒர் புள்ளியில் அமைந்துள்ளன.

கீழிலிருந்து மேலாக இடது கையில்,
முதல் நாடிப்புள்ளிக்கான பூதம் நீர். இதன் யின் உறுப்பு சிறுநீரகம் (K) கீழ் நாடியாகவும், யாங் உறுப்பு சிறுநீர்ப்பை (UB) மேல் நாடியாகவும் உள்ளது.
இரண்டாம் நாடிப்புள்ளி பூதம் மரம். உறுப்புகள் : கல்லீரல் (LV) கீழ் நாடி, பித்தப்பை(GB) மேல் நாடி.
மூன்றாம் நாடிப்புள்ளி பூதம் நெருப்பு. உறுப்புகள் : இதயம் (H) கீழ் நாடி , சிறுகுடல்(SI) மேல் நாடி.

கீழிலிருந்து மேலாக வலது கையில்,
முதல் நாடிப்புள்ளி பூதம் நெருப்பு. உறுப்புகள், இருதயமேலுறை (P) கீழ் நாடி, மூவெப்பமண்டலம் (TW) மேல் நாடி.
இரண்டாம் நாடிப்புள்ளி பூதம் மண். உறுப்புகள், மண்ணீரல்(SP) கீழ் நாடி, இரைப்பை (ST) மேல் நாடி.
மூன்றாம் நாடிப்புள்ளி பூதம் காற்று. உறுப்புகள், நுரையீரல் (LU) கீழ் நாடி, பெருங்குடல் (LI) மேல் நாடி.

கீழிலிருந்து மேலாக இடது கையிலிருந்து வலது கை என நாடிப் பூதங்களின் வரிசை என்பது, பூத சுழற்சியினை சரியாக கொண்டிருக்கும். ஆகையால், நாடிக்கான பூதத்தினையும் உறுப்பினையும் மனதில் கொள்வது என்பது மிக எளிது.

இடது கை : நீர் > மரம் > நெருப்பு >
வலது கை : நெருப்பு > மண் > காற்று >

நெருப்பில் நான்கு உறுப்புகள் இருப்பதால், இடது கையில் முடிவாக இரண்டு உறுப்புகள், வலது கையில் தொடக்கமாக இரண்டு உறுப்புகள் என நெருப்பு பூதம் மட்டும் இரண்டு கைகளிலும் அமைந்துள்ளது.

பூதத்தின் யின் யாங் உறுப்புகளின் அடிப்படையில் கீழ் நாடி - மேல் நாடி என உறுப்புகளை பிரித்துக் கொள்ளுங்கள்... நெருப்பு பூதத்திற்கு மட்டும் முதன்மையான இதயம் & சிறுகுடல் ஆகிய யின் யாங் உறுப்புகள் இடது கையில் அமைந்துள்ளன, மீதம் இதயமேலுறை & மூவெப்பமண்டலம் வலது கையில் அமைந்துள்ளன என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

உறுப்பின் நாடியினை கையில் எந்தப் புள்ளியில் பார்க்க வேண்டும் என்பதனை படத்தினைப் பார்த்து மனதில் பதிந்து கொள்ளுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

அக்குபஞ்சர் பஞ்சபூத நலச்சுழற்சி

Post by ஆதித்தன் » Wed Jun 13, 2018 10:45 am

ஐந்து பூதங்கள் மூன்று சுழற்சி முறையில் இயங்குகின்றன. அவை சரியான முறையில் இயங்கினால் ஆரோக்கியம். சுழற்சியில் ஏற்படும் குழப்பம் நோய். ஆகையால், அக்குபஞ்சர் முறையில் நோய்களைக் குணப்படுத்த முதலில் நமக்கு பஞ்சபூதங்களின் சுழற்சியினைப் பற்றி நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான், முன்பு பார்த்த 60 பஞ்சபூதப் புள்ளிகள் மூலம் நோய்களைக் குணப்படுத்தும் சிகிச்சியினை சிறப்பாக செய்ய முடியும்.

பஞ்சபூதச் சுழற்சியினை மூன்றாகப் பிரித்துள்ளனர். அவை, ஆக்கச் சுழற்சி, கட்டுப்படுத்தும் சுழற்சி மற்றும் எதிர்வினைச் சுழற்சி. கட்டுப்படுத்தும் சுழற்சி மற்றும் எதிர்வினைச் சுழற்சியினை நன்மைச் சுழற்சியாக பார்ப்பதோடு, அவற்றினை நாம் நோய் தீர்க்கும் சிகிச்சை சுழற்சியாக
அக்கு பஞ்சரில் பயன்படுத்தலாம்.

Image

குறிப்பு : காற்றினை Metal என்று சீனத்தில் குறிப்பிட்டுள்ளார்கள், ஆகையால் பல இடங்களில் அவ்வாறு இருக்கலாம். நீங்கள் Metal என குறிப்பிடப்படுவது காற்றினைத்தான் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

ஒர் பூதம் மற்றொரு பூதத்தினை படைக்கும் இயக்கம், ஒர் தொடர் வரிசைச் சுழற்சியாக நடக்கிறது. இதனை ஆக்கச் சுழற்சி என்கிறோம். அதாவது, நிலம் > காற்றினை படைக்கிறது, காற்று > நீரினைப் படைக்கிறது, நீர் > மரத்தினைப் படைக்கிறது , மரம் > நெருப்பினைப் படைக்கிறது, நெருப்பு > நிலத்தினைப் படைக்கிறது.

தெளிவாகச் சொன்னால், நீர் மூலம், மரங்கள் வளமாக வளர்கின்றன. மரங்கள் காய்ந்து கட்டையாகவும் சருகாவும் மாறினால், நெருப்பு நன்றாகச் செலுமையாக எரிகிறது. நெருப்பு எரிந்து முடிந்தால், கடைசியில் சாம்பல் மண் ஆகிறது. மண் வாசனை என்றுச் சொல்வோம்.. அதாவது மண்ணுக்குள்ளே பல வாயுக்கள் உருவாகின்றன, அது மண்ணோடு உலோகத் தாதுக்களாக மாறுகின்றன.. அதனை உலோகம் என்ற அடிப்படையில் சீனத்தில் Metal என்று குறிப்பிட்டுள்ளார்கள். நமது ஊர் அக்குப்பஞ்சர்சிட் ஆசான்கள் தான், உலோகத்திற்கு முன் வாயுக்கள் தான் என்று பஞ்ச பூதத்தில் Metal/உலோகத்தினை காற்று என குறிப்பிட்டார்கள். தென்றல் காற்று வீச, மேகங்கள் மழையாகப் பொழிந்து நீர் ஆகிறது, புயல் வந்தால் மழை வந்துவிடும் என்பதும் நமக்கு ஆக்கச் சுழற்சியினை எளிதாகப் புரிந்து கொள்ள வசதியாக இயற்கை உள்ளது. மழை பொழிய மரங்கள் செழிப்பாக வளர்கின்றன. இது அக்கப்பஞ்சர் வரையறுத்த பஞ்சபூத ஆக்கச் சுழற்சி.
அடிப்படையாக பஞ்ச பூதங்கள் எவ்வாறு உருவாகின என்பதன் எனது கருத்தினை ஒர் பதிவில் இரண்டு வருடத்திற்கு முன் பதிந்துள்ளேன்.. அந்த என் கருத்துப்படி, இல்லா இருப்பிலிருந்து முதலில் கண்ணால் பார்க்க முடியா காற்று என்ற பூதமே முதலில் தோன்றியது. இல்லாமையும் இருப்புமே இயக்கத்திற்கான அடிப்படை. இருப்பாகிய காற்று இல்லா சக்தியினூடே அங்கும் இங்குமாய் இயங்க ஆரம்பித்தது. அந்த இயக்கம் தாங்காமல் காற்றினை அழிக்க வெப்பத்தினை உருவாக்கி நெருப்பு என்ற பூதத்தினை உருவாக்கியது. தீ எரிய காற்று வேண்டும். தீ எரிந்து வெப்பம் அதிகம் ஆக ஆக, காற்று குறைந்து போக... நெரிப்பின் ஆதிக்கத்தினை ஓடுக்க நீர் என்ற பூதம் உருவாகியது. கடுமையான கோடைக்காலத்தில் வெப்பம் இருக்கும் காற்றுக்களை சாப்பிட்டுவிடுவதனால் தான் அப்பகுதில் காற்று குறைகிறது... அதனைச் சமநிலைப்படுத்த வெப்பத்தினை தாங்கி அதிக காற்றுள்ள பகுதியான கடல் பகுதியிலிருந்து காற்று வேகமாக புயலாக வந்து காற்றின் குறைபாடினை சமநிலைப்படுத்த முயல்கிறது. அதே நேரத்தில் மழையும் பெய்து வெப்பத்தின் தாக்கத்தினையும் குறைத்துவிடுகிறது என்ற இயற்கை நிகழ்வுகளை நினைவில் கொள்ளுங்கள். முன் காலத்தில் மழை நீண்ட காலம் பெய்யாமல் இருந்தால் கொடும்பாவி எரிக்கும் வழக்கம் இருந்தது. இன்றும் கிராமங்களில் இந்த வழக்கு இருக்கலாம். நான் அறிந்து எனது ஊரில் 1996 - 2000 ஆகிய காலக்கட்டத்தில் மழை வேண்டி கொடும்பாவி எரித்துள்ளார்கள். நீர் அதிகம் ஆகிவிட்டால் வெப்பத்தினை அழித்து குளிர்ச்சியும்... அதன் தொடர்ச்சியாக பனிக்கட்டியாகவும் மாற ... வெப்பமும் நீரும் காற்றும் தன்னைக் காத்துக் கொள்ள நிலம் என்ற புதிய பூதத்தினை உருவாக்கியது. நிலத்தில் ஐம்பூதங்களும் ஒன்றை ஒன்று சார்ந்து இயற்கை உருவாகியது. இயற்கை உயிரினங்கள் பிறப்பிடமாகியது. பூமியின் அடியில், நெருப்புக் குழம்பு - வாயுக்கள் - நீர் - பாறை(மண்)- மற்றும் கண்டிப்பாக ஆகாயமாகிய வெற்றிடமும் இருக்கிறது. பூமி வெளியிலும் ஐம்பூதங்கள் இருக்கிறது. பிரபஞ்சமும் ஐம்பூதமே என்று அண்டமும் பிண்டமும் ஒன்று என நம்முன்னோர்கள் கூறிவிட்டார்கள்.
அக்குபஞ்சர் ஆக்கச் சுழற்சியினை தாய் சேய் என்ற விகித்தல் ஒவ்வொரு பூதத்திற்கும் தாயாக அதன் ஆக்க பூதத்தினை பார்க்கலாம். அதாவது,

நிலம் தாய் என்றால் அதன் சேய் காற்று
காற்று தாய் என்றால் அதன் சேய் நீர்
நீர் தாய் என்றால் அதன் சேய் மரம்.
மரம் தாய் என்றால் அதன் சேய் நெருப்பு.
நெருப்பு தாய் என்றால் அதன் சேய் நிலம்.

நீரின் தாய் காற்று, நெரிப்பின் தாய் மரம் என்ற ரீதியிலும் அக்குப்பஞ்சர் ஆக்கச் சுழற்சியினை நினைவில் கொள்ளுங்கள்.

Image
கட்டுப்பாட்டு சுற்று/அழிக்கும் சுற்று

ஆக்கம் சுற்று ஒர் வட்டமிட்டோம். அதில் ஒர் ஐந்துமுக நட்சத்திரமாக வருவது கட்டுப்பாட்டு சுற்று. ஆச்சி-பேத்தி என்ற ரீதியில் வரைந்தால் சரியாக இருக்கும்.

நிலம் ஆச்சி என்றால் அதன் பேத்தி, காற்றின் பிள்ளையாகிய நீர்.
காற்று ஆச்சி என்றால் அதன் பேத்தி, நீரின் பிள்ளையாகிய மரம்.
நீர் ஆச்சி என்றால் அதன் பேத்தி, மரத்தின் பிள்ளையாகிய நெருப்பு.
மரம் ஆச்சி என்றால் அதன் பேத்தி, நெருப்பின் பிள்ளையாகிய நிலம்.
நெருப்பு ஆச்சி என்றால் அதன் பேத்தி, நிலத்தின் பிள்ளையாகிய காற்று.

இப்பொழுது ஆச்சியிலிருந்து பேத்திக்கு ஒர் அம்பு குறியிட்டால், நட்சத்திர வடிவிலான கட்டுப்பாட்டு/அழிக்கும் சுற்று வந்துவிடும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதைப்போல் தான் இங்கும் நன்மை தீமை என்பன ஏற்படுகின்றன.

நிலம்/மண் காற்றாக ஆக்கச் சுற்றில் மாறுகிறது. இந்த கூடுதல் மண், தன் பேத்தியாக நீர்க்கு போகும் பொழுது, நீரினை பாதுகாத்து தேக்கி வைக்கும் அரணாக நலன். நீர் கொஞ்சமாக இருக்கும் சூழலில் அதிக மண் சென்றால், அங்கிருக்கும் நீரினை சேறாக்கும்... நீரே இல்லாமல் ஆழ்த்துவிடும் தீமை.

காற்று மரத்திற்கு செல்லும் பொழுது தென்றல் காற்றாக நலன், அதிக காற்று சென்றால், சூறாவளிக் காற்றாக மரங்களை தாக்கி அழித்துவிடும்.

நீர் மென்மையாக எண்ணைய்த்தன்மையுடன் சீராக தீபமாக ஏற்ற பயன்படுகிறது, அதுவே நீர்மை அதிகமாகிவிட்டால் நெருப்பினை அனைத்துவிடும்.

மரம் நிலங்களில் இருக்கும் பொழுது அதன் நிலச்சரிவிலிருந்து பாதுகாக்கிறது, அதுவே நிலம் முழுமையும் அடைத்துவிட்டால் அதன் கழிவுகளால் மண் கெடுகிறது.

நெருப்பு அளவாக இருந்தால் காற்றின் இயக்க வேகத்திற்கு பலனாக இருக்கும், அதுவே அதிகமானல் காற்றினை தாக்கி சூறாவளிக்கு வழிவகுத்துவிடும்.

ஆகையால், பேத்தியின் செயல்பாட்டினை சிறப்பாக்க ஆச்சியின் வருகை பலன் கொடுக்கும் விதத்தில் அமைந்தால் கட்டுப்பாட்டு சுற்று. அவ்வாறு இல்லாமல், அளவுக்கு மிஞ்சிய தீமை செயல்பாடாக அமையுமாயின், பேத்தி தன் எதிர் வினையினை ஆச்சியின் மீது காட்ட ஆரம்பிக்கும், அது எதிர்வினைச் சுற்று.

Image
எதிர்வினைச் சுற்று:

காட்டுப்பாட்டுச் சுற்றின் அம்புகுறியினை அப்படியே எதிராக மாற்றிவிட்டால், எதிர்வினைச் சுற்று நட்சத்திரம் வந்துவிடும்.

நிலம் தன் மீது வளரும் மரம், வளரவிடாமல் எதிர்வினை காட்டுகிறது.
காற்று நெருப்பை அணைக்கிறது.
நீர் பெருகி நிலத்தினை மூடுகிறது.
மரம் வேகமாக வரும் காற்றினை தடுக்கிறது.
நெருப்பு நீரினை ஆவியாக்கி இல்லாமல் செய்கிறது.


உடலில் நோய் என்பது ஏதேனும் ஒன்றின் குறைபாடாக இருக்கலாம் அல்லது மிதமிஞ்சிய அதிகமாகவும் இருக்கலாம். குறைவாக இருந்தால், அதன் ஆக்கத்திற்கு தூண்டலாம், அதைப்போல் அதன் விரயத்தினையும் குறைக்கலாம். அதிகமாக இருந்தால் விரயத்தினை அதிகரித்து ஆக்கத்தினை குறைக்க தூண்டலாம்.

ஆக்கச் சுற்று, கட்டுப்பாட்டு சுற்று, எதிர்வினைச் சுற்று ஆகியவற்றினை நன்றாக உள்வாங்கிக் கொண்டால், நாடித்துடிப்பின் மூலம் குறை-மிகையினைக் கண்டுபிடித்து, அதற்கான பூதப்புள்ளியினை தூண்டுவதன் மூலம் எளிதாக நோய்களைக் குணப்படுத்தலாம்.

அடுத்து, நோய் மற்றும் நோய்க்கான காரணம், அதனால் நாடி எவ்வாறு இயங்கும், அதனை எவ்வாறு அக்குபஞ்சர் புள்ளிகள் மூலம் சரி செய்யலாம் என்பதனைப் பார்க்கும் பொழுது மேலும் விவரம் பார்ப்போம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

அறுசுவையும் அருமருந்து

Post by ஆதித்தன் » Sun Jul 08, 2018 12:45 pm

உணவே மருந்து, அறுசுவையும் அருமருந்து.
உணவே ஆரோக்கியம், ஆரோக்கியமே நோயினை குணப்படுத்துகிறது.

நமது முன்னோர்கள் சுவைகளை ஆறாகப் பிரித்துள்ளனர். அவை, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உப்பு, கசப்பு, காரம்.

வாதம் பித்தம் கபம் என்பதற்கு ஏற்ப, சுவைகளையும் வகைப்படுத்தியுள்ளனர்.

வாதம் சுவை = துவர்ப்பு புளிப்பு.
பித்தம் சுவை = உப்பு கசப்பு.
கபம் சுவை = இனிப்பு காரம்.

இதனை மனதில் கொள்ள,
இனிப்பிற்கும் காரத்திற்கும் எச்சில் நன்றாக ஊறும், நீர் பெருக்கெடுக்கிறது... நீர் - கபம்.
துவர்ப்புக்கும் புளிப்பிற்கும் உடல் எங்கும் மயிர்கள் கூச்சமாகும், குளிர்ந்தக் காற்றிற்கு உடல் புல்லரிப்பது... காற்று-வாதம்
உப்புக்கும் கசப்புக்கும் கை உதறித்தள்ளும், நெருப்பினை கண்டு கை விலகுவது போல.. நெருப்பு-பித்தம்.

துவர்ப்பு : இரத்தம் ஊற, அதிகமாக தடையின்றி ஓடும் இரத்தத்தினையும் நீரையும் கட்டுப்படுத்த
புளிப்பு - கொழுப்பை அதிகரிக்க

உப்பு - எலும்பு வளர்ச்சிக்கு , உஷ்ணம் உண்டாக்க
கசப்பு - நரம்பு பலம் பெற

காரம் - உஷ்ணம் உருவாக்க, உமிழ் நீர் ஊற
இனிப்பு - சதை வளர்ச்சிக்கு


ஒவ்வொரு சுவைக்கும் சில உணவு எடுத்துக்காட்டு:

துவர்ப்பு - கடுக்காய், புளியங்கொட்டை,வாழைப்பூ,அத்திபழம்
புளிப்பு - புளி, எலுமிச்சை, அரிசி, பருப்பு, தயிர்-நெய், புளியங்காய்
உப்பு - வாழைத்தண்டு, முள்ளங்கி, வெங்காயம், நெல்லிக்காய், இளநீர்.
கசப்பு - தேன், கத்தரிக்காய், சுண்டக்காய், பூண்டு, தேங்காய், கடுகு, வெந்நீர், வேப்பிலை.
காரம் - மிளகாய், மிளகு, இஞ்சி, சுக்கு, பொறிகடலை, கருணைகிழங்கு, மிளகாய்.
இனிப்பு - வாழைப்பழம், பனங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை..


சுகர்க்கு தேன் சாப்பிடுங்க என்று சொல்வதன் காரணம், அதன் உட்சுவை கசப்பாக இருப்பதன் காரணம் தான். கசப்பு பல நோய்க்கு தீர்வாக இருப்பதால், மருந்துகளை தேனில் கலந்து சாப்பிடும் வழக்கத்தினை நம் முன்னோர்கள் கொண்டிருந்திருக்கின்றனர்.

இது பொதுவான நமது முன்னோர்கள் கடைப்பிடித்த முறை..
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”