உங்களோடு என் வாழ்வின் நிகழ்வுகளை பகிர்ந்துகொள்ளவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். எம் பேரு.......... (கொஞ்சம் நிறுத்துங்கள், எம் பேரு மீனாகுமாரி என் ஊரு கன்னியாகுமாரி, என்று நீங்கள் சன்னமாய் முனுமுனுப்பது, என் செவிகளில் சன்னமாய் ஒலிக்கிறது.)
அய்யோ ! பாருங்கள் உங்கள் பாடல் என்னை திசை திருப்புகிறது.
சரி கொஞ்சம் அமைதியாய் இருந்தால் என்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறேன்.
நான் யாழினி, என் பெற்றோர் எனக்கு வைத்த அருமையான பெயர். யாழைப்போன்று இனிமையாக வாழ்வேன் என்ற எண்ணத்தோடு வைத்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.
யாழினி,
என்னை நான் வர்ணித்திக்கொள்வதில் ஒரு கிக் இருக்கவே செய்கிறது. சராசரிக்கும் கொஞ்சம் குறைவான உயரம், கொஞ்சம் சாயலில் ஷாலினியை ஒத்த முகவெட்டு, நீண்டகருங்கூந்தல், சரி ஒருமுறைபார்க்கலாம் இன்று இளைஞர்களை திரும்ப வைக்கும் அழகு. (திரும்பி பார்த்தவர்கள் தூக்கம் வராமல் தவித்தால் அதற்கு பொறுப்பு நான் அல்ல).
நகரமும் அல்லாமல், கிராமமும் அல்லாமல், இரண்டும் சேர்ந்த கலவையான ஒரு நகரத்தில் வசிக்கிறேன் நான். அம்மா ரிட்டயர்ட் டீச்சர், அப்பா நோ மோர். நான் என் பெற்றோருக்கு ஒரே மகள். இப்படி உங்களோடு பேசிக்கொண்டே, குளித்து உடைமாற்றி, என் அலுவலகத்திற்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு சென்றுக்கொண்டிருக்கிறேன். மூன்றாவது தளத்தில் என் குடியிருப்பு, அம்மாவின் இருப்புகள் அப்பாவின் மருத்துவ செலவில் கரைந்து போனதால், சேமிப்பு ஒன்றும் அதிகமாக இல்லை. நான் அதைப்பற்றி வெகுவாக கவலைப்படுவதில்லை. நான் படிகளில் இரண்டாவது தளத்தைக்கடந்த போது, அம்மாவின் குரல் சன்னமாய் ஒலிக்கிறது. “இந்த பொண்ணு சாப்பட்டை கொண்டுபோகமல் போகிறாளே, வயத்துக்கு அல்சர் வந்தா என்ன பண்றது, டீ யாழினி கொஞ்சம் நில்லேன், வயசாயிடுச்சில்லயா, நடக்கமுடியலடி...........”
சற்று தாமதித்தேன், அவள் குரலுக்கு ஒரு வசீகரம் உண்டு, அந்த குரலில் தாய்மை வழிவதால், என்று எண்ணுகிறேன். சாப்பாடு டப்பாவை தந்தபடி, கொஞ்சம் யோசிடி ரங்கநாதன் மாமா தந்தாரே அந்த வரன் உனக்கு பொருந்தும் என்று எண்ணுகிறேன், போட்டோ பைல வச்சிருக்கேன், அப்புறமா பாரு, என்று கெஞ்சலும் கொஞ்சலுமாய் கூறினாள்.
சரிம்மா என்று தலையாட்டி வைத்னேன், இன்றும் சற்று நேரம் அவளோடு நின்றால், வயசான காலத்துல ஏன்டி இப்படி கஷ்டப்படுத்துற, காலாகாலத்துல கலியாணம் பண்ணி, ஒரு பேரனோ பேத்தியோ, பெத்துக்கொடுத்த அத கொஞ்சின சந்தோஷத்தோடு போய் சேருவேனில்ல........என்று அனுதின பல்லவி பாட ஆரம்பித்துவிடுவாள்.
தெருவை கடந்து, பிரதான சாலையில் கலந்து பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க துவங்கினேன். சர்ர்ர்ரக்கென்று கடந்து போகும் வாகனங்களின் ஹாரன் ஒலியும், காலைக்கே உரித்தான குளுமையும், மிதமான வெம்மையும் இதமான உணர்வை மனதிற்குள் விதைத்தது.
பேருந்தில் அவ்வளவாக கூட்டமில்லை. ஆனாலும் அலுவலகத்தை நெருங்குவதற்குள்ளாக வேர்த்து ஒழுகும். தீப்பெட்டிக்குள் அடுக்கிவைக்கப்படும் தீக்குச்சிப்போல ஏம்பா, உள்ளே போ, போ உள்ளே என்று அதட்டலோடு நடத்துனர்கள் அடுக்கப்படுவர்கள். உங்களுகே தெரியுமே நீங்கள் ஒன்றும் இது போன்ற நிகழ்விற்கு விதிவிலக்கு அல்லவே !
நாசியை தொட்டுபோன வியர்வை, சென்ட், பவுடர்பூச்சு, மெதுவடை மல்லிகை பூ, என்று கலவையான மணங்களை உள்வாங்கியபடி நகர்ந்து இருவர் அமரும் சன்னலோர இருக்கையில் அமர்ந்தேன்.
அக்கா மெதுவடை, அம்மா மெதுவடை, மெதுவடை மெதுவடை, என்ற வடை விற்கும் சிறுவனின் குரல் என்னை ஏனோ சங்கடப்படுத்தியது. படிக்கும் வயதில் அவனுக்கு என்ன கஷ்டமோ, ஆலோசனை சொல்வது கடினம், அதை செயல்படுத்துவது தான் கடினம். இந்த வேலையை விட்டு படி என்று சொல்ல எழுந்த ஆவலை எனக்குள்ளே அடக்கிக்கொண்டேன். தினமும் ஒரே பேருந்தில் பயணிப்பதால் அந்த சிறுவன் நன்கு பரிச்சயமானான். குட்மார்னிங் கா, என்று சிரித்தவனை பார்த்து கையசைத்தேன்.
அந்த கையசைப்பு எனக்கு முன்பு நின்றிருந்தவனின் தோளில் சாய்ந்திருந்த குழந்தையின் கவனத்தை என்பால் திருப்பியது. அழகாய் துரு துரு கண்களோடு, சிவந்த இதழ்கள் குவிந்தும் குவியாமல் சிரித்த குழந்தையின் முகம் மலர்ந்து என்பார் தாவியது.
அப்பொழுதுதான் கவனித்தேன், ஒரு கையில் மாட்டிருந்த பேக்கின் கனமும் குழந்தையின் தாவலும், அவனை நிற்கவே தடுமாறச்செய்தது. என் பக்கத்து இருக்கை காலியாக இருந்தும் அவன் அமராமல் தள்ளி நின்றது, எனக்கு கொஞ்சம் விந்தையாக கூட இருந்தது. ஆண்களில் இப்படிப்பட்டவர்களும், இருக்கிறார்களா என்ற என் எண்ணத்தை அழித்து, ஒரு வேளை கவனிக்காதிருக்கக் கூடும் என்று எண்ணிக்கொண்டேன்.
சார், சார் , என்று இருமுறை அழைத்தும் திரும்பாததால், நான் முகத்தை திருப்பி ஜன்னல் பக்கமாய் வேடிக்கைப் பார்க்கலானேன். அந்த குழந்தை மழலை ஓசை எழுப்பி என்னை கவர முற்பட்டது. அந்த செயல் அம்மாவின் பேரன் பெயர்த்தி கூற்றை நினைவுப்படுத்தவே, நான் “அந்த மணமகனின் புகைப்படத்தைப் பார்த்தால் என்ன” ? என்று எண்ணினேன்.
(நான் திருமணம் செய்வதா வேண்டாமா என்று யோசித்து வையுங்கள்.)
என் பார்வை அந்த குழந்தையின் மீது பதிந்த போது, குழந்தையை வைத்திருந்தவன் நிற்க முடியாமல் பேருந்தின் ஒட்டத்தில் தடுமாறிக்கொண்டிருந்தான். முன்புற இருக்கையில் அமர்ந்திருந்தவர்களிடம், “கொஞ்சம் அவர கூப்பிடுங்களேன்“ என்றுரைக்க, அவர் அழைக்கும் வேகம் காற்றின் சீற்றத்தில் கரைந்து போனதால், நானே எழுந்து அந்த குழந்தையை என் பாற் வாங்கவேண்டியதாயிற்று.
நான் குழந்தையை பிடுங்குவதாய் எண்ணியிருக்க வேண்டும். அவனின் பிடி குழந்தையை இறுக பற்ற, சற்று சிரமத்துடனேயே அவனிடமிருந்து குழந்தையை நான் வாங்க வேண்டியதாயிற்று. சார் அங்கே சீட் இருக்கு, குழந்தையை வச்சுக்கிட்டு சிரமப்படுறீங்களே வந்து உட்காருங்க, என்ற இருக்கை நோக்கி நகர்ந்தேன். குழந்தையை கொண்டு செல்ல அவன் அனுமதி எனக்கு தேவையாய் இருக்கவில்லை. அவனால் மறுக்கவும் முடியவில்லை, என் பின்னோடே குழந்தைக்காக வரவேண்டியிருந்தது.
முன்புறம் அமர்ந்திருந்த கல்லூரி மாணவர்களில் யாரோ சீழ்கை ஒலி எழுப்பினார்கள்.
“கொஞ்சம் சுமாரா, அழகா, தனியா, ஒரு ஆம்பிளை நடமாட முடியலடா சாமி............“ என்று கமெண்ட் வேறு.
(கிண்டலும் கேலியும் ரசிக்கும்படியாக இருந்தால் பரவாயில்லை தான், பிறரை காயப்படுத்துவதாக இருக்கக்கூடாதே)
அந்த கிண்டல் அவனை காயப்படுத்தியிருக்க வேண்டும், தேவையா? இருக்கை இல்லை என்று நான் உங்களை கேட்டேனா?.
(அவர்கள் கிண்டலடித்தது என்னவோ என்னைதான், இயல்பாய் எனக்கு தான் வருத்தம் ஏற்பட்டிருக்க வேண்டும்.)
ஓ, சாரி சார், உங்களுக்கு இருக்கை வேண்டாம் என்றால் ஒரு பாதகமும் இல்லை. குழந்தையை மட்டும் நான் வைத்துக்கொள்கிறேன், இறங்கும் போது வாங்கிக்கொள்ளுங்கள்“
அய்யோ என்ன பெண் நீங்கள், நம் இருவரையும் தான் அவர்கள் கிண்டல் அடிக்கிறார்கள்.
இருக்கட்டுமே, கிண்டலைவிட உங்கள் குழந்தையின் உயிர் விலைமதிப்பற்றதாய் உங்களுக்கு தோன்றவில்லையா? படி நேராய் நின்றிருந்தீர்கள், ஏதோ விபரீதம் நடப்பது போன்று பயம் ஏற்பட்டதால் எழுந்து வந்தேன், இதில் என்ன தவறை கண்டுவிட்டீர்கள், என்னவோ ஏதோ ஆகட்டும் என்றிருக்க, நான் ஒன்றும் விலங்கினம் இல்லவே, சற்று மனிதத்தன்மையோடு சிந்தியுங்களேளேளேளன்.......................... இந்த இழுவைக்கு காரணம் பேருந்து ஓட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் தான்.
கல்லூரி மாணவர்களின் ஓஓஓஓ வென்ற கூச்சல்,பயணிகளின் சலசலப்பு இறைவேண்டுதல், அங்கு அசம்பாவித சூழலை நிச்சயப்படுத்தியது.
குழந்தையை அவனிடம் கொடுத்துவிட்டு எழுந்தேன், பேருந்து தாறுமாறாய் பயணித்தது. ஓட்டுநர் ஹேண்பாரின் மீது முன்புறமாக கவிழ்ந்திருந்தார்.
மனம் முழுவதும் திகிலை சூழ்ந்து கொண்டாலும், படிக்கும் போது சாரணர் இயக்கத்திலிருந்ததால் ஏற்பட்ட மனதிடம் உடன் வரவே செய்தது.
நான் ஓட்டுநர் இருக்கையை நோக்கி நகரவும், பயணிகளின் பயக்கூச்சல் ஒலியும், நிகழ்வாய் இருக்கும்பொழுதே........ கல்லூரி மாணவர்களின் ஒருவன் ஓட்டுநர் இருக்கையை ஆக்கிரமித்து, பேருந்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நிறுத்தினான். நிறுத்தப்பட்ட பேருந்திலிருந்து விட்டால் போதும்மென்று பயணிகள் வெளியேற, மாணவர் இருவர் ஓட்டுநரை இரு இருக்கைகளின் இடையே உள்ள இடைவெளியில் கிடத்தினார்கள், அவர்களில் ஒருவன் ஓட்டுநரின் இதயத்தில் கைகளால் அழுத்தினான், (இந்த சீன் எல்லா புகைப்படங்களிலும் வருமே.........உங்களுக்கு பரிச்சயமானதுதான்.)
நான் ஓட்டுனரின் தலைப்புறமாக அமர்ந்து அவர் தலையை என் மடிமீது வைத்துக்கொண்டேன். வியர்த்த முகத்தை சேலை தலைப்பால் துடைத்து விட்டேன். ஓட்டுநர் நல்ல நேரம் போலும் கால் மணி நேர போரட்டத்திற்கு பிறகு கண்களை மெல்ல திறந்தார். கல்லூரி மாணவர்களிடையே இதற்கும் ஓஓஓஓவென்ற கூச்சல்தான்.
ஒரு உயிரை காப்பாற்றிய திருப்தி அம்மாணவர்கள் முகத்தில், உயிர் தப்பிய உணர்வு எந்தன் உள்ளத்தில், இந்த நிலையை தமிழ்ராஜாவின் அறிவுரையை நான் மறந்தே போனேன். மாப்பிள்ளையின் புகைப்படத்தையும் தான்.
தமிழ்ராஜாவின் அறிவுரை நினைவிற்கு வருமா என்று ஊகித்து வையுங்கள்................
மீண்டும் சந்திப்போம்.
ஒரு உயிர் பிழைத்த உற்சாகம் சில நொடிகளிலேயே, மரணத்தை தழுவியது. ஓட்டுநர் மூச்சுவிட திணறினார். இமைகள் பிரிய துடித்து, இயலாமையுடன் தழுவிக்கொண்டன. உயிர் பிரியும் தருவாயில் நீண்ட பெருமூச்சுகள் எழுமே, அப்படி தொடர்பெருமூச்சுகள் எழுந்தது அவரிடத்தில். அவர் என்று சொல்வதற்கில்லை அவன் தான் என் வயது தான் அவனுக்கும் இருக்கும் என்று எண்ணுகிறேன்.
நான் முடிவே செய்துவிட்டேன், லைவ்வாக ஒரு மரண நிகழ்ச்சி அரங்கேறப்போகிறது என்று. கத்தி அலறவும் முடியாமல், துக்கத்தை மறைக்கவும் முடியாத நிலை எனக்கு. என் உடல் வியர்வையில் குளித்தது. விழிகளில் கண்ணீர் பெருகியது. நான் என்ன செய்கிறேன் என்பதை மறந்தேன். மெல்ல அவன் காதருகில் குனிந்து உன்னை நேசிக்கிற யாருக்காகவேணும் நீ பிழைத்துக்கொள் என்றேன்.
உலகத்தில் பிறந்த யாருக்கும் நம்மை பிறர் அன்பு செலுத்த வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கவே செய்யும்.
(நெப்போலியன் ஹில் எழுதிய புத்தகங்களை படித்ததின் விளைவு)
உன் மனைவிக்காக, அல்லது காதலிக்காக, உன்பெற்றோருக்காக அல்லவென்றால், உன்னை நேசிக்கும் யாரோ ஒருவருக்காக, அட்லீஸ்ட் எனக்காகவாவது, (உடனே அதீதமாய் கற்பனை செய்துவிடாதீர்கள், காதலுடன் நேசிப்பதற்கும் சக மனிதனாய் நேசிப்பதற்கும் அதிக வித்தியாசம் உள்ளது.) நான் மீண்டும் மீண்டும் ஆழமாய், உணர்வுப்பூர்வமான உச்சரிப்பினூடே கூறினேன். என்னை சுற்றியிருந்தவர்கள் என்னை பயித்தியமாக கூட எண்ணியிருக்கக்கூடும்.
நான் அழுதேன், அரற்றினேன், பிரார்த்தனை செய்தேன். “ஆபத்பாந்தவா அநாதை ரட்சகா, எந்த ரூபத்திலாவது வந்து விடு வந்து காப்பாற்று”
“யார் அந்த பொண்ணு, அப்படி அழுவுது”.
“அதுவா டிரைவர் பொண்டாட்டியாம்பா பாவம் சின்ன வயசு”
“அட நீ வேற டிரைவருக்கு இன்னும் கலியாணம் ஆகல” இடை மறித்து ஒருவர்.
“அப்படியா சொல்ற..... ஒரு வேள தங்கச்சியா இருக்குமோ”
அவர்களின் ஆராய்ச்சி என் பக்கமாக திரும்பியிருக்க, எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது அந்த குரல், நகருங்கப்பா டாக்டர் வந்தாச்சு, வழிவிடுங்க..........
கூட்டம் விலகி வழிவிட்டது. ஓ என் பிரார்த்தனை கடவுளின் செவிகளுக்கு எட்டிவிட்டதா?”.
பெண்களின் கண்ணீருக்கு கற்களே கரையும் போது, கடவுள் கரைய மாட்டாரா என்ன?.
வந்த மருத்துவர் ஏதோ ஒரு ஊசியை ஓட்டுநருக்கு, குத்தினார். நான் கண்களை இறுக மூடிக்கொண்டேன். எனக்கு ஊசி என்றால் கொஞ்சம் பயம்பா. (சரி சரி புரிகிறது......சூழ்நிலை புரியாமல் கிண்டல் பண்ணாதீர்கள் ஆதித்தன்)
“ கொஞ்ச நேரத்திற்கு பயமில்லை, ஒன் ஹவர்க்குள்ளாக இவரை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தாக வேண்டும். இவரோடு யார் வருகிறீர்கள், என்று மருத்துவர் சுற்றும் முற்றும் பார்த்தார்.
“நான் வருகிறேன் சார்” என்றேன்.
“ நீங்கள்........”என்று இழுத்தார்
“ பயணிதான்” என்று முடித்தான் அந்த குழந்தைக்கு சொந்தக்காரன்.
(மருத்தவரின் பார்வையில் பேருந்தில் பயணம் செய்ததற்காகவே இப்படி ஒரு ரியாக்ஷான என்ற கேள்வி தொக்கிநின்றது)
“குழந்தையை பிடியுங்கள்” என்று என்னிடம் நீட்டினான்.
என் மடியில் ஒட்டுநரின் தலை வைக்கப்பட்டிருந்ததால், நான் குழந்தையை வாங்க தயங்கவே..........மருத்துவர் கௌதமன் என்று குரல் கொடுத்தார்.
“அண்ணா என்றபடி முன் வந்தான் அவன், உங்களுக்கு அறிமுகமானவன்தான் சற்று முன் பேருந்தை நிறுத்திய அந்த மாணவன்.
“இவரை தூக்கி காரில் கிடத்திவிடுங்கள் பா”
அவனும் நண்பர்களுமாய் ஓட்டுநரை தூக்கிச்சென்றார்கள்.
நான் குழந்தைக்கு உரியவனிடமிருந்து குழந்தையை வாங்கினேன்.
“ஹேய் நாம தான் தப்பா புரிஞ்சுகிட்டோம், அந்த பொண்ணு, கொஞ்சம் நெட்டையா குழந்தையை வச்சிக்கிட்டு இருந்தானே அவன் பெண்டாட்டிப்பா..........”
கிசு கிசு தொடர்கிறது.
ஓட்டுநர் பிழைத்தாரா?
கிசு கிசு வில் எதாவது நிஜமாகுமா?
சிந்தித்து வையுங்கள்.............................. மீண்டும் சந்திப்போம்.
மெல்ல மாலை மயங்கும் நேரம், காகங்களின் கா கா, மரக்கிளை கிளிகளின் கீச் கீச் ஒலியும் மனதை சாந்ததென்றலுடன் உறவாடச்செய்தது. இருளும் அல்லதா பகலும் அல்லாத, மங்கலான வெளிச்சத்துடன் கூடிய பொழுது அது.
அந்த மருத்துவமனையின் நீண்ட வளாகத்தில், சுவற்றிற்கு முதுகை கொடுத்தப்படி அமர்ந்திருந்தேன் நான். சற்றே கலைந்த தலை, லேசாய் கசங்கிய உடை. கொஞ்சமே கொஞ்சமாய் இடம் பெயர்ந்த ஸ்டிக்கர் பொட்டு, என்னை போன்றே வாடியிருந்த ரோஜா மலர்.
சற்று தூரத்தில் பார்த்தும் பார்க்காமல் நின்ற அந்த குழந்தைக்கு உரியவன். என்னருகே உரசிக்கொண்டு அமர்ந்திருந்த கௌதமன். அவன் மேல் கால்களை நீட்டியவாறு கௌதமனின் நண்பன் ரவி, எங்களுக்கு நேர் எதிரில் அவசர சிகிச்சை பிரிவு. இடையிடையே அங்கும் இங்குமாய் அவசர நடைபோடும் வெள்ளை சீறுடை நர்ஸ்கள்.
“பிகாசோ ஒவியம் போல அழகா இருக்கீங்க மேடம்” என்றான் கௌதமன்.
சற்றே திரும்பி முறைத்தேன்.
“ சைட் அடிக்குற நேரமாடா இது”
“ இதோ பாருடா மேடத்துக்கு ஆசைய, நான் பாட்டிய எல்லாம் சைட் அடிக்குறது இல்ல, ஒன்லி பியுட்டியை மட்டும் தான் பாக்குறது”
இத்தருணம் கௌதமனை வருணிக்காமல் போனால், அருந்தா வருத்தப்படக்கூடும். சுருண்ட கேசம், அடர் கருவிழிகள், வெளுப்பும் இல்லாமல் விஷாலைபோன்று கருப்பாகவும் இல்லாமல், நடுத்தரத்தில் ஒரு கலர் என்ன கலர் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். சராசரி உயரம். அவன் அணிந்திருந்த ஸ்கை புளு ஷர்ட்டும், கருமை நிற பேண்ட்டும், அவனை மேலும் அழகுபடுத்தி காண்பித்தன.
வாயில் எப்பொழுதும் எதையோ மென்றபடி இருந்தான். கல்லூரி வாழ்க்கைக்கே உரித்தான குறும்பு அவனிடத்தில் அவ்வப்போது தலைநீட்டியது.
“உங்க ஹீரோ தனிமையில இனிமை காண்கிறாரா? கூப்பிடுங்க மேடம் வந்து உட்காரட்டும்”
“என்ன சீண்டலினா உனக்கு தூக்கம் வராதா”
“அய்யோடா சீண்டவும் இல்லை, தூண்டவுமில்லையப்ப நிஜயத்தை சொன்ன செல்லம் இப்படி கோவிக்கலாமா“
“அடிவாங்க போறடா“
“எதுக்காம்“
“கொஞ்சமாவது மரியாதை இருக்கா உனக்கு“
சிரித்தான், சிரிப்பிலும் கொஞ்சம் லேசான வருத்தம் தெரிந்தது. பசியும் தெரிந்தது. எனக்கும் தான், நாங்கள் யாரும் உணவருந்தவில்லை.
பசி வயிற்றின் உள் பாகங்களோடு கதை பேசியது. இரண்டு கால்களுக்கு இடையே முகத்தை புதைத்துக்கொண்டேன்.
“ஹலோ எக்ஸ்க்யுஸ்மீ“
“இந்த எக்ஸ்க்யுஸ்மீ யில் தனுஷ் ஐ நினைவுப்படுத்தினான்.
“உங்க ஆள கூப்பிடும்மா, பசிக்குது அப்புறம் அழுதுடுவேன்“ என்று வடிவேலை துணைக்கழைத்தான். நான் முகத்தை நிமிர்தாமலேயே,
“எப்படிடா கூப்பிடறது“ என்றேன்.
“கூப்பிடவேண்டாம் பாடுங்க, உன் பேரே தெரியாது, உன்னை கூப்பிட முடியாது, உனக்கோர் பெயர் வைப்பேன் உனக்கே தெரியாது”
“ப்ளீஸ் டா கௌதம், விளையாடாம கூப்பிடு”
“ எப்பவும் ஒரே மாதிரி இருக்கனும், தூங்கும்போது மட்டும் சார், தோள் மேல சாஞ்சுப்பாங்களாம், இப்ப மட்டும் டூ விட்டுடுவாங்களாம், என்ன பொண்ணுங்கடா”
அவன் விளையாட்டாய் சொல்லிவிட்டு போனாலும் மனம் காயப்பட்டது மனம், முன் பின் தெரியாத யாரோ ஒருவனின் தோளில் இளைப்பாறியிருக்கிறேன், என்பதை மனம் குற்றப்படுத்தியது. ஓட்டுநரின் உடல் சற்று தேறியதாய் மருத்துவர் சொன்னபிறகே அந்த குட்டி உறக்கம் கூட. என்னையறியாமல் உறங்கி விழுந்திருப்பேன் போலும், தோளில் சாய்த்துக்கொண்டான், அதற்கு இத்தனை கிண்டல்.
உறக்கம் கலைந்து எழுந்த போது, மனம் பதறி விலகியது, அவன் உரிமையாய் சாய்த்துக்கொண்டதில் நட்பையும் மீறி வேறு ஏதோ தெரியவே, பெண்மைக்கே உரித்தான எச்சரிக்கை குணம், அவன் பிடியில் இருந்து விலகச்செய்தது.
சற்று தூரத்தில் குழந்தையை தோளில் போட்டபடி நின்றிருந்த அவனை பார்த்தேன். அவன் மேல் எனக்கு கோபம் வந்தது. திருமணம் செய்து குழந்தையும் பெற்றுக்கொள்வானாம், இன்னொரு பெண்ணை உரிமையுடன் தோளிலும் சாய்த்துக்கொள்வானாம். என்ன கொடுமை ஆதித்தன் இது, தமிழ்ராஜா நீங்களாவது என் தரப்பு நியாயத்தை கேட்கக்கூடாதா?
(அருந்தா முறைக்கத்துவங்கி விட்டதால் இன்று நான் எஸ்கேப் ஆகி நாளை வருகிறேன்)
யாழினி ஆகிய நான் காதலில் விழுந்துவிட்டேனா?
கந்தா காப்பாற்று.
சரக்............சரக்.............சரக்.............கென்று காலனி தரையுடன் உரசும் சப்தம். கௌதமனின் அண்ணா, என்னை நோக்கி அந்த நீண்ட காரிடரில் ஓடிவந்துக்கொண்டிருந்தார். எனக்குள் பயம் தன் உற்சவத்தை காண்பிக்க தொடங்கியது.
நான் நடந்து வந்து கொண்டிருந்தவர்களை நோக்கினேன், அவர்களும் எங்கள் இருவரின் முகச்சாயலை கண்ணுற்றதினால், நடையை துரிதப்படுத்தினார்கள். நான் எழுந்தேன். என் கால் கட்டைவிரல் புடவையில் அழுந்த முன்புறமாக தடுமாறினேன். வந்தவன் என் இடுப்பில் கைகொடுத்து தாங்கி நிறுத்த, அதை ரசிக்கும் மன நிலையில் நான் இல்லை என்பதே உண்மை.
நான் யாரையேனும் தொடும்போதோ, அல்லது, யாரேனும் தொடும்போதோ, எனக்கு என்ன உணர்வுகள் ஏற்படுகிறது என்று உற்று நோக்குவது என்பது வாடிக்கைதான், தற்போதோவென்றால், ஆராய்ச்சி செய்யும் மனநிலையில், நான் இல்லை என்பதாலும், அதைவிட முக்கியமாக, ஓட்டுநருக்கு ஏதோ சம்பவிக்கப்போகிறதென்ற திகிலாலும், அவனிடமிருந்து துரிதாமாய் விலகி, மருத்துவரை நோக்கிச்செல்லத்துவங்கினேன்.
“சரவணனோட பல்ஸ் இறங்கிக்கிட்டு இருக்கு, அவரோட குடும்பத்திற்கு தகவல் தரவில்லையா நீங்கள்? வினா பொதுவாகவே எழுந்தது.
இந்தவினாவிற்கான விடை எங்களிடத்தில் இல்லை, ஏனென்றால் சரவணின் குடும்ப விடயங்களை நாங்கள் யாரேனும் அறிந்திருக்கவில்லை. காலை எட்டு மணியிலிருந்து இதுவரையிலும் நிகழ்ந்த நிகழ்வுகள் எங்களுக்குள் ஒரு நட்பு பாலம் அமைத்திருப்பினும், சரவணின் குடும்பததிற்கு தகவல் தரவேண்டும் என்று எங்களில் யாருக்கும் எள்ளளவும் தோன்றவில்லை.
மருத்துவத்திற்கான கட்டணத்தை கௌதமும், நெட்டையனுமே ஏற்றார்கள், என்றாலும் பணப்பற்றாக்குறை ஏற்படுமாயின் அதை ஈடுசெய்ய நானும் தயாராகவே இருந்தேன்.
நாடித்துடிப்பு அடங்குகிறது என்றால், இறக்கப்போகிறார் என்று தானே அர்த்தம், கடவுளுக்கு மனம் இரங்கவில்லை போலும், இவள் என்ன படுகை வாசகர்களை இந்த வாட்டு வாட்டுகிறாள், இவளை அழவைத்து பார்க்க வேண்டும் மென்று திட்டமிட்டுவிட்டார் என்று எண்ணுகிறேன்.
என் கண்களில் மீண்டும் கண்ணீர் மையமிடுகிறது. இம்முறை நான் மட்டுமல்ல, மூவருமே செய்வதறியாது திகைத்து இயலாமையினால் கண்ணீர் துளிகளை பதியனிடுகிறோம்.
“நல்ல நண்பன் வேண்டும் என்று அந்த மரணமும் நினைக்கின்றதா?, சிறந்தவன் நீ தான் என்று உன்னை கூட்டிச்செல்ல வந்து விட்டதா?. மனம் இசைக்க தொடங்கியது.ள (லிரிக்ஸ் தவறாக இருந்தால், சரியான லிரிக்ஸை உச்சரித்துக்கொள்ளலாம் படுகை வாசகர்கள்)
அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, அந்த பெண் சற்றெ தலையை மட்டும் நீட்டி, விக்னேஷ் என்று விளித்தாள்.
விக்னேஷ்......... கௌதமனின் அண்ணார்தான், அவன் உள்ளே சென்ற பிறகு, கதவு சார்த்திக்கொண்டது.
கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டவளாக, அந்த கண்ணாடி கதவின் வழியே உள்நோக்கினேன்.
சரவணனின் உடல் இருந்த நிலை என்னுள் அதீத பயத்தை உண்டு பண்ணியது. சுவாசிக்க ஆக்ஸிஜன் கொடுத்திருந்தார்கள், உயிர், உடலை பிரிய ஆசித்து போராட்டம் நடத்தியது, அதன் விளைவு, உடல் தூக்கி எரிய, அதனை இருவர் அடக்கி பிடிக்க முயன்று கொண்டிருந்தார்கள்.
நான் எதிர்பாராத வேளையில், கதவு திறக்கப்பட்டது, விக்னேஷ் ஐ அழைத்த அந்த புதியவள்,பேடில் வைக்கப்பட்டிருந்த தாள்களை காண்பித்து நீங்க, சரவணா மனைவிதானே, இதில் ஒரு கையெழுத்து போடுங்கள் என்றாள்.
நான் சரவணாவின், மனைவி அல்லவென்று சொல்ல எத்தனித்த வாயை அடக்கிக்கொண்டேன். நான் செய்வது தவறா சரியா என்று யோசித்து முடிவெடுக்க நேரமில்லை.
(மனைவி என்று கையெழுத்திடுவதா, அல்ல என்று ஓதுங்கி வேடிக்கைப்பார்ப்பதா? சிந்தித்து வையுங்கள் விரைவில் வருகிறேன்.)
சில நேரங்களில் சிந்தித்து நிதானமாய் முடிவெடுக்க நேரம் இருப்பதில்லை. அப்படி நிதானமாய் முடிவெடுப்போம் என்று நாம் ஒத்திவைத்தோமானால், சூழ்நிலை கொண்டு வந்து நிறுத்தும் முடிவை ஏற்க முடியாமல், மறுத்து மாற்றிக்கொள்ளவும் முடியாமல், நெருக்கடியான நிலையில் நிற்போம் என்பதை மறுத்துச் சொல்லவும் வாய்ப்பில்லை.
கையெழுத்திடுவதா, வேண்டாமா என்ற கண நேர போராட்டம் தான், சில நொடிகள் தாமதித்தாலும் சரவணனின் உயிர் பறந்து போக வாய்ப்பிருப்பதால் புதியவளின் கைகளில் இருந்து கையெழுத்து இடவேண்டிய தாள்களை வாங்கி கையெழுத்திட்டேன்.
குழந்தை கௌதமனின் தோளில் தவழ்ந்திருந்தாள். சில நிகழ்வுகள் தூக்கம் பசி மகிழ்ச்சி இவற்றை திருடிக்கொள்ளும் போது மனநிலையில் ஏற்படும் மாற்றம் சுற்றியிருக்கும், சுற்றி நிகழும் செய்பாடுகளில், உறவுகளில், மனதின் விருப்பங்களில் நாட்டமில்லாமல் போகும், அவ்வன்னமே யாழினியின் நினைவுளில் குழந்தை தற்காலிக மறதியை பெற்றிருந்தாள். விக்னேஷ் வெளியில் வந்து பொதுவாக பார்த்து, ......................... அந்த பார்வை மனதில் கலவரத்தை உண்டுபண்ணியது,
அவனிடத்தில் ஒரு ஆழ்ந்த பெருமூச்சு வேறு, சற்று நிதானத்திற்கு பிறகு, அவன் பேசினான்.
“சரவணன் இன்னும் ஆபத்து கட்டத்தை தாண்டவில்லை, அவரது இதயத்தின் இரண்டு வால்வுகளும் முழுமையாக கொழுப்பினால் அடைக்கப்பட்டிருக்கிறது. அதன் விளைவால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த இரவு கடந்து, இந்த இரவில் மீண்டும் மாரடைப்பு ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில், சரவணன் உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது. நாளை அப்பல்லோவில் இருந்து இதயத்திற்கான தலைமை மருத்துவர் வருகிறார். அதிக செலவுகள் ஆகும். அவர் குடும்பத்திற்கு தகவல் சொல்லிவிட்டீர்கள் தானே?
“ஏன் விக்கி கவலைப்படுகிறாய், சரவணனின் தர்மபத்தினி இதோ இருக்கிறாளே?.“
“சீரியஸ்நெஸ் புரியாமல் விளையாடாதே கௌதம்“ என்று அடக்கினான் விக்னேஷ்
நான் யோசித்தேன், எடிஎம் கார்டு பேகில் தான் இருந்தது. பேக் இல்லை. பேக் பேருந்திலேயே பயணித்து டிப்போவில் யாரேனும் பாதுகாப்பாய் எடுத்து வைத்திருக்கலாம் அல்லவென்றால் சக பயணி யாரேனும் சுட்டபழம் என்று காபளிகரம் செய்திருக்கலாம்,
அருந்தாவிற்கும் தமிழ்ராஜாவிற்கும் மெயில் பண்ணலாம், ஆதித்தனுக்கு அவசர உதவி என்று போன் பண்ணலாம், எது எப்படி இருந்தாலும் அங்கிருந்து பணம் போட்டாலும் எடுக்க எடிம் கார்ட் வேண்டுமே?
தீவிர சிந்தனையின் போது, கை தானாய் கழுத்து சங்கிலியின் முனை பிடித்து விளையாடும், அது குழந்தை பருவ பழக்கம் என்று எண்ணுகிறேன். தாய் முளை காம்பில் வாய் பதிந்திருக்க, தாலியை பற்றி விளையாடும் குழந்தை.
“சங்கிலி........ ஹய் என்றேன்.
“என்ன ஹய்“ – கௌதம்
விக்னேஷின் பார்வையில் கேள்வி தொக்கி நின்றது.
நெட்டையன் சற்றே எரிச்சலாய் என்னைப்பார்த்து என்ன என்றான்.
“பொழுதும் அவன் பார்வையில் தீக்கழம்பு கழன்றது, அது நிஜமா? அல்லது என் மனம் அவ்வாறு கற்பித்துக்கொள்கிறதா? என்றும் தெரியவில்லை.
அவன் பார்வையை சந்திக்க திராணியற்றவளாய், விக்னேஷை பார்த்து, இது மூன்று பவுன் சங்கிலி, எப்படியும் விற்றால், 60,000தேறும், தற்போதைய செலவுக்கு இது போதும் தானே?
“என்னவோ சொன்னாயே அண்ணா, இதோ பார் தர்ம பத்தினி என்பதை நிரூபிக்கிறாள்.
“கையெழுத்து போட்டாள் தர்மபத்தினி ஆகிவிடுவாளா? இது என்ன விளையாட்டு, பார்ப்பவர்கள் தவறாய் நினைக்கப்போகிறார்கள், நெட்டையன் எனக்கு ஆதரவு தெரிவித்தான்.
இல்லை ஜீவா சார், எதற்கெடுத்தாலும் முந்திரிக்கொட்டை போல் முந்திக்கொள்கிறாள் பாருங்களேன். நாமும் இங்குதான் இருக்கிறோம்.
அவன் பெயர் ஜீவா என்பதா? பெயரில் இருக்கும் ஜீவன் பார்வையில் இல்லையே, கண்கள் கஞ்சியில் தொய்த்து எடுத்ததை போன்று அது என்ன பார்வை.
ஏதோ யோசித்தவனாய், சரவணின் முழு மருத்துவ செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்றான் ஜீவா
“நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே........” என்று இழுத்தான் கௌதம்.
இப்படி யாழினி பாடவேண்டியது, அவளுக்குபதிலா நான் பாடுறேன் என்று முடித்தான்.
என்னை வம்புக்கு இழுக்கலேன்னா உனக்கு தூக்கம் வராதா?
“வம்பிழுக்கிற மாதிரி நீ ஒருத்திதான் இருக்கிற”
இந்த பேச்சை இதோட விட்டுடு, எனக்கு ரொம்ப பசிக்கு, ஜஸ்ட் ஒரு காஃபி கிடைக்குமா?
“அப்போ நீ ஜீவா வ லவ் பண்ணல”
“நான் காஃபி கேட்டேன்டா“
“போய் மாமாகிட்ட கேளு அம்மணி”
இவன் பேசியது அத்தனையும் அவன் காதில் விழுந்தாலும், அவன் மறுப்பேதும் சொல்லாமல் இருந்ததில், கௌதம் இப்படி பேசுவது அவனுக்கு விரும்பம் தானோ என்று எனக்குள், சந்தேகத்தை ஏற்படுத்தியது.
என்ன பேசுவதென்று தெரியவில்லை எனக்கு, காலையில் அம்மா ஊட்டிவிட அவசர அவசரமாய் உண்டது. வயிற்றில் பசி பெருங்குடல் சிறுங்குடலை தின்னதொடங்கியிருந்தது.
“ அட்லீஸ்ட் ஜஸ்ட் சைட்டாவது அடியேன், அம்மணி வெறும் கழுத்தாய் இருக்கக்கூடாது என்று மருத்துவ செலவை ஏற்கும் அந்த பாரிவள்ளலுக்காக”
நான் முறைத்தேன்.
“ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி டி” என்று ராகம் பாடினான்.
“ஏய் என்னடா டி சொல்லற” இது ரவி
என் அக்காவ இப்படிதான் கூப்பிடுவேன்....இவளையும் அப்படிதான் கூப்பிடுவேன்.
“என்ன மச்சான் இப்படி சொல்லிட்ட, பிகாசோ ஒவியம் னு சொன்ன” -ஜீவா
“ஜஸ்ட் மிஸ், ரெண்டு வயசு பெரியவளா போய்ட்டாளே...“
“அடப்பாவி” என்று வாயில் கைவைத்தேன். கௌதம் சிரித்தான் அவன் கண்களும் சேர்ந்து சிரித்தது.
“என்னவிடுங்கப்பா, குழந்தைக்கு பசிக்குமில்ல”,
“பாருடா நம்ம தாயுமானவள, குழந்தைக்கு பால் ஊட்டினது நானு, தூங்க வச்சது நானு,”
“ஹேய் அவனா நீ........... என்று இடைபுகுந்தான் ரவி.
எனக்கு தான் கொஞ்சம் தர்ம சங்கடமானது. ஆதித்தனை போன்றே குழந்தையை மறந்ததற்காக குற்றம் சுமத்துகிறானே என்றானது.
“அப்போ நீங்க எல்லாம் காஃபி குடிச்சாச்சு“
“எஸ்“ இது ரவி
“அப்போ நான் உங்க லிஸ்ட்ல இல்ல அப்படிதானே?“
“நோ கண்மணி, உனக்கு சீரியல் நடிகைப்போல் அழவே நேரம் சரியாக இருக்கிறது” என்று கிசுகிசுத்தான் ஜீவா
இது என்ன புதுகதை, இந்த துணிவு எப்படி வந்தது இவனுக்கு. நான் திரும்பி முறைக்கதான் எண்ணினேன்....... முடியாமல் இமைதாழ்ந்தது.
இமைகளில் ஒரு வானவில் விழிகளை தொட்டு பேசுதே, இது என்ன புது வானிலை மழை வெயில் தரும்............அருந்தா ஹம் செய்வது போல் எனக்கொரு உணர்வு.
நாங்கள் யாருமே எதிர்ப்பார்க்காத சூழலில், எங்களின் மனதின் இதமான உணர்வை கெடுப்பது போன்று..........
அந்த மூதாட்டி சராசரிக்கும், அதிக பருமனுடையவலாய் இருந்தாள். வயோதிகம் நடையிலும், உடலிலும் தெரிந்தது. பெரிய தோடுகள் போட்டதாலோ என்னவோ காது அறுந்திருந்தது. வெற்றிலை காவி பற்களில். எண்ணெய் காணாத தலையை அள்ளி முடிந்திருந்தாள்,
சற்றே வேக நடை, நடையினூடே உச்சரிக்கப்பட்ட வார்த்தைகள் அனைவரையும் அவள் புறமாய் திருப்பியது.
அடி பாதகத்தி குடியை கெடுத்தவளே, நீ நல்லா இருப்பியோ நாண்டுகிட்டு சாவியோ..................ஒப்பாரி ராகத்தில் நீண்டது. நான் அவள் புறமாய் திரும்புவதற்கு முன்பாக அவள் கரம் கொத்தாய் என் தலைமுடியை பற்றியது.
“நானா, யார் குடியையாவது கெடுப்பேனா?“
அவள் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்களா”
யார் அந்த மூதாட்டி?................................................வினாக்களுடன் விடைபெறுகிறேன்.
நானாவது பிறர் குடியை கெடுப்பதாவது, முதியவளின் எதிர்பாராத தாக்குதலில் மனம் தீடிர் தடுமாற்றத்தை அடைந்தாலும், சற்றென்று சுதாரித்துக்கொள்ள முயற்சிக்கும் முன்பாகவே, அவள் இரண்டுகைகளாலும், முதுகில் ஓங்கி அறைந்தாள். வலித்தது, என்னை பெற்றவள் கூட என்னை அறைந்ததில்லை.
என் தகப்பானார் அதிர்ந்து ஒரு வார்த்தைக்கூட பேசியதில்லை. இதயம் படபடத்தது, சரவணனுக்கு அடுத்த பெட்டை எனக்கு தயார் செய்து விடலாம் அப்படி ஒரு நிலை.
கண்களில் ஏன் கண்ணீர் வழியவில்லை. எனக்காக அழ ஒரு துளி கண்ணீர் கூடவா மிச்சமில்லை.
அடுத்த அறைக்கு அவள் தயாராகும் முன்பாக நான் விலக முற்பட, முதியவள் பின்புறமாய் என் ஜாக்கெட்டை பற்றி இழுத்ததில், அவள் வளுவான கைகளில் ஒரு பகுதி இடம்பிடித்தது. என்ன எதுவென்று பிறர் சுதாரிக்கும் முன்பாக இந்நிகழ்வு நிகழ்ந்து முடிக்க, ஜீவா முதியவளை தடுக்க, கௌதமன், தோளில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையுடன் செய்தறியாது நிற்க, விக்னேஷ் அங்கிருந்து என்னை அனைத்து விலக்க....................................
“ நீ நல்லாவே இருக்க மாட்ட, நாசமா போய்டுவ, உன் வம்சம் விளங்கது, உன் வீட்டு வாழைமரம் வத்திப்போக, ஒப்பாரி நீண்டது பதிவிடஇயலா வார்த்தைகளோடு.
நான் சட்டென்று முந்தானை பிரித்து போர்த்திக்கொண்டேன். என் உடல் அவமானத்தில், கூனி குறுகியது. தரைதளத்தில் இருந்த ஒவ்வொரு வார்டில் இருந்தவர்களும் வேடிக்கை பார்த்தனர்.
தீடிரென எழுந்த கலவர சப்தத்தில், அதிர்ந்து எழுந்த குழந்தை மூச்சு விடாமல் கத்தியது.
தூரத்தில் செக்யுரிட்டி ஓடி வருவது தெரிந்தது.
ஜீவா முதியவளை தடுத்து நிறுத்தியிருந்தான். இரவின் அமைதியை கிழித்துக்கொண்டு ஒலித்தது அந்த முதியவளின் ஓலம்.
அது அன்றைய இரவிற்கு ஒவ்வாமல், தனித்து நாரசமாய் தோற்றமளித்தது.
கண்கள் அழட்டுமா வேண்டாமா, என்று கலங்கி கலங்காமல் நின்றது. துக்கம் தொண்டையை அடைக்கும் என்கிறார்களே அது இது தானோ,
கலங்கிய கண்களுக்குள் அம்மா சிரித்தாள். அவளுக்கு இன்னும் ஒரு போன் கூட செய்யவில்லை. கொசு கடித்து விடுமோ, ஈ
மொய்த்துவிடுமோ, என்று பார்த்து பார்த்து வளர்த்தவள் அம்மா.
வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் பணி எனக்கு, பல வேளைகளில் வேலை முடித்து தாமதாமாகவே விடு திரும்புவதும், தவிர்க்க முடியாத நாட்களில் இரவு வேலைபார்ப்பதும், வேலை பளுவின் காரணமாக தகவல் தர மறப்பதும் வாடிக்கை என்பதால், என் பாதுகாப்பை குறித்து அவள் பரிதவிக்கப்போவதில்லை.
யாரோ அடிக்கிறார்கள், வசை மாரி பொழிகிறார்கள். குடி கெடுத்தவள் என்கிறார்கள். எனக்கொன்றும் புரியவில்லை.
மனம் வலித்தது, மனதின் வலி முகத்தில் தெறித்தது. உடல் தகித்தது. கண்கள் இருண்டது.
“என்னாச்சுப்பா“ விக்னேஷ் என்னை தாங்க ஆயத்தமானான்.
நான் சரிந்தேன்...............ஹேய்ய்ய்ய்ய்ய்...............ஜீவாவின் குரல் என் செவி தீண்டியது.
அங்கு எல்லோரிடம் ஒரு நிகழ்வு மாற்றம் ஏற்பட்டது.
குழந்தையை சமாதானப்படுத்திக்கொண்டிருந்த கௌதமன், குழந்தையை தூக்கியபடி ஓடி வந்தான்.
நான் சரிந்தேன்.............
என்விழிகளின் ஓரங்களில் கண்ணீரும் சரிந்தது.
உள்ளத்தில் தானே புயல் மையம் கொள்ள உதடுகள் உச்சரித்தது நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை.
மனிதாபிமானம் மாபெரும் குற்றமா?
யாரோ தாங்கினார்கள்.
ஹேய், யாரச்சும் கொஞ்சம் தண்ணி கொண்டுவாங்கப்பா, விக்னேஷ்.
யாரோ தண்ணீர் கொண்டுவந்தார்கள்.
யாரோ முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள்.
இந்த யரோக்களின் உள்ளத்தில் எங்கோ மனிதாபிமானம் ஒட்டிக்கிடக்கிறதல்லவா, அது எனக்கு கொஞ்சம் அதிகமோ, அல்லவென்றால் நான் தான் எல்லா விடயங்களையும் மிகைப்படுத்தி காண்கின்றேனோ?
மெல்ல கண்விழித்தேன், என் முகம் நோக்கி அநேக முகங்கள் குனிந்திருந்தன. கொஞ்சம் பரிதாபம், கொஞ்சம் பரிதவிப்பு கொஞ்சம் என்ன நடந்ததென்று அறியும் ஆவல்.
அந்த பொண்ணு கண்ணு முழிச்சிருச்சு,
கொஞ்சம் தூக்கிவிடுங்கப்பா,
கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுங்க.
யாரோ கை கொடுத்தார்கள், யாரென்று காண்கிறேன், அட நம்ம ஆதித்தன்.
விழிகள் அகல விரிகிறது. எனக்குள் மலர்ந்த ஆச்சர்த்திற்கு அளவே இல்லை, இப்படி சிநேகிதிக்காக ஒடிவந்த இதயத்தின் துடிப்பை என்னவென்பது.
என் தலை தாங்கிய மடி எதுவென்று நோக்கினால், அந்த மடிக்கு சொந்தக்கரரான தமிழ் ராஜா அங்கு நின்றதால், நண்பர்களை கண்ட மகிழ்ச்சியில் என் துயரம் எங்கோ பறந்து போனது.
(சுமையா சென்னை சென்று விட்டதாலும், அருந்தாவிற்கு தேர்வு இருப்பதாலும், அவர்களால் என்னை தொடர்பு கொள்ள இயலவில்லை என்பதை பிறகு அறிந்தேன்.)
உறவுகளிடமும், உற்றவர்களிடமும், பகிர்ந்து கொள்ள முடியாத எத்தனையோ, விஷயங்கள் நண்பர்களின் இதயத்தில் இரகசியமாய் புதைந்துபோகிறது.
கௌதமனின் முகத்தில் நிம்மதி, ஜீவா...........அந்த கண்களில் திடீரென்று மின்னிவிட்டு உணர்வின் சேதி என்னவென்று தெரியவில்லை. முதல்ல வந்து உக்காருங்க, அப்புறம் சந்ததோஷப்படலாம், கைப்பற்றி அழைத்து சென்றான் விக்னேஷ்
என்னை சூழ்ந்திருந்த மனித முகங்கள் கலைந்தது.
குழந்தை அதிகம் அழுதுவிட்டால் போலும், வாடியிருந்த முகம். என்னை கண்டு சிரிக்கலாமா வேண்டாமாவென்று தாமதித்த இதழ்கள்.
நான் நடந்தேன், என் பின்னாக, ஆதித்தன், தமிழ்ராஜா, ரவி, ஜீவா, கௌதமன்,............ஒரு படை தளபதி தன் சேனைகளுடன் வெற்றி நடைபோடும் காட்சி என்னுள் விரிந்தது.
எல்லையில்லா உற்சாகம் எனக்குள், அதற்காக உற்சாக பானம் அருந்திவிட்டேன் என்று யாரும் தவறாய் கற்பிதம் செய்யக்கூடாது.
ஹேய் ரெண்டு பேரும் எங்கப்பா வந்தீங்க, மனதில் மகிழ்ச்சி முகத்தில் பிரதியிட்டு புன்னகையாய் வழிந்தது.
2 எபிசோடா, பசி வித் காஃபி பற்றியே பேசிட்டிருந்த, சைட் அடிக்கிறவங்க யாரும் காஃபி வாங்கிதர மாதிரி தெரியல, அதான் காஃபியோட வந்த மேடம் பிபி வந்து சாஞ்சுட்டீங்க........... ஆதித்தனுக்கே உண்டான குறும்பு அவன் (அவர்) கண்களில் வழிந்தது.
என்னப்பா நீ தைரியமான பொண்ணுன்னு நெனச்சேன், இப்படி சாஞ்சுட்ட, நான் நெனக்கிறேன் உனக்கு பசி மயக்கம்னு, தமிழ் ராஜாவிற்கே உரித்தான கரிசனை விழிகளில்.
(விழிகள் மட்டுமே மனிதனின் உண்மையான உணர்வுகளை அடையாளப்படுத்தும்.)
நான் கேட்டது வேறப்ப எதுக்கு வந்தீங்க?
“ லூசு ஹாஸ்பிட்டல் அட்ரஸ் சொல்லு, அந்த பாட்டியம்மாவ சாமாதானப்படுத்த வரேன்னு சொன்னேனில்ல, தமிழ் ராஜாவின் கையால் செல்ல கொட்டு ஒன்றை தலையில் வைத்தான் (தார்)
ஒரு இன்ஜக்ஷன் போட்டுகிறியா? – விக்னேஷ்
“வேண்டாம்பா, அதான் ஆதித்தன் காஃபி வாங்கிவந்திருக்காரே, குடிச்சா டயர்ட் போயிடும்“ (ஊசியென்றால் கண்ணை கசக்கி அழுவேன் என்பது வேறு விஷயம்)
அனைவருமாய் ஹாஸ்பிடல் ஸ்டாப்களின் ரெஸ்ட்ரூமில் தஞ்சம்புகுந்தோம்.
ஜீவா காஃபியை என் கைகளில் திணித்தான்.
குழந்தை கௌதமனிடம் சேட்டை பண்ணிக்கொண்டிருந்தாள். கௌதமன் அவளோடு விளையாடி இடையிடையே எங்கள்பாற் பார்வையை செலுத்தினான்.
“யார் அந்த லேடி“
“யார்“ முகத்தை அசைத்து கண்களால் வினவினேன்.
“உன்னை அடிச்சது“ என்று வினவினான் ஆதித்தன்.
“அவங்கள சமாதானப்படுத்ததானே வந்தேன்“ – தமிழ்ராஜா
“அப்போ என்னை பார்க்க வரல”
ஆதித்தன் தமிழ்ராஜா இருவருமே ஹேய்......... என்று கோரஸ் எழுப்பினார்கள். அந்த ஒலியில் அவர்கள் என்மீது வைத்திருந்த நட்பின் ஆழம் தெரிந்தது.
“நான் பண்ண கலாட்டாவில் சரவணனை மறந்துடோமோ?“
“சரவணன் நல்லா இருக்கார், அவர் மனைவி வந்துட்டாங்கப்பா“ – கௌதம்.
“எல்லாம் சரி உன்னை அடிச்சது யாரு” மீண்டும் வினவினான் ஆதித்தன்.
“எனக்கெப்படிப்பா” தெரியும் என்று கைகளை விரித்தேன்
“யாழினியை அடிச்சது யாருன்னு நான் சொல்றேன்” சம்மன் இல்லாமல் ஆஜரானான் ரவி.
யாழினியை அடித்த அந்த முதியவள் யார்?
சம்மன் இல்லாமல் ஆஜரானாலும், ரவி சொல்ல வந்த சேதி என்னை பற்றியது என்பதால், யார் என்ற வினா முதலில் என்னிடத்தில் இருந்தே எழுந்தது.
அதை அறியும் ஆவல் தமிழ்ராஜாவிடம் அதிகம், என்றாலும் ஏனையவர்களும் அந்த விடயத்தை அறிந்து கொள்ளும் ஆவலில் சளைத்தவர்களாக இருக்கவில்லை.
பழகிய பலமணி நேரங்கள், ஒரு நட்பு அலைகளை பரவ விட்டதில் இயற்கை தவறேதும் செய்யவில்லை என்று எண்ணுகிறேன். இங்கே யாருக்கும் யாரிடத்திலும், எவ்வித எதிர்பார்ப்புகளும் இல்லை. யாரோ என்று எண்ண முடியாத அளவிற்கு அங்கே நட்பு விரவிக்கிடந்தது. சக தோழிக்கு நிகழ்ந்த நிகழ்வு, அனைவர் மனதையும் காயப்படுத்தியிருந்தது.
அனைவர் பார்வையும் அவன் மேல் ஆர்வமாய் திரும்பியிருக்க,
நடுவாந்திரமாய் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தபடி, எனக்கு தெரியாது......... எல்லோரும் எப்படி ரியாக்ட் பண்றீங்கண்ணு............ என்று இழுக்கும் பொழுதே கௌதமன் வலிக்காமல் அவன் முதுகில் அடித்தான்.
காற்றிழந்த பலூனை போல் ஆனது, முதியவள் யார் என்று அறிய ஆவல் கொண்டவர்களின் நிலை.
ஆதித்தன் தலையில் கை வைத்துக்கொண்டான்.
எப்படியாவது அவங்கள சமாதானப்படுத்தனும்னு நெனச்சு வந்தேன், பட் முடியாம போச்சு, வருத்தபடாதீங்க யாழினி, உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நன்மையாகவே நடக்கும் என்றான்.
அப்படி அவன் வாய் சொன்னதே தவிர முகத்தில் ஏமாற்றம் பிரதிபலித்தது.
கௌதமன் ரவியின் விளையாட்டை சுலபமாக எடுத்துக் கொண்டாலும், ஜீவாவின் முகத்தில் சிறு எரிச்சல் வந்து மறைந்ததை யாழினியாகிய நான் கவனிக்க தவறவில்லை.
அவனிடையே ஏற்பட்ட முகமாற்றங்கள் எனக்கு எதையோ உணர்த்தினாலும், நட்பா காதலா என்றொரு இனம் புரியா குழப்பம் என் உள்ளத்தை ஆட்டுவித்தது.
எனக்கும் அந்த முதியவளை குறித்து அறிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் அவள் அடித்ததைவிட, அவள் வார்த்தைகள் என்னை கொன்றது.
ஜீவாவின் மீது இடைப்பட்ட நிமிடங்களில் ஏற்பட்ட குழப்பமான உணர்வு, முதியவளின் குடியை கெடுத்தவள் என்ற வார்த்தையை ஊர்ஜிதப்படுத்திவிடுமோ என்றொரு அச்சத்தை எனக்குள் உண்டாக்கியது.
அடிப்படையில் நான் யாருக்கும் தீங்கு செய்யக்கூடியவளே அல்ல. என் பார்வை இயல்பாய் ஜீவாவின் பக்கம் திரும்பியது.
குழந்தை அவன் தாடையில் தன் வாயை வைத்து கடித்தாள், கீழ் இரண்டு பால் பற்கள் வந்திருந்தது. நிச்சயம் அவனுக்கு லேசாய் வலிக்கதான் செய்திருக்கும், வலியை உணர்ந்து சிறு ஆ என்றொரு ஒரு எழுந்த போதும், ஊடாக நகைக்கவே செய்தான் அவன்.
இரண்டு கைளாலும் குழந்தையை அனைத்துக்கொண்டதைப் பார்த்த போது, புகைப்படம் எடுத்திருந்தால், தகப்பனின் பாசம் அங்கு காவியமாக்கப்பட்டிருக்கும் என்றே தோன்றுகிறது.
ஹ, ஆ, அம்மா என்று அவள் தத்தி தத்தி மழலை பேசினாலும், இசையாய் வந்து செவி தீண்டிய உணர்வு எனக்கு.
என் முகம் என் உணர்வுகளை பிரதிபலித்ததோ என்னவோ, ஆதித்தன் என் கையை பற்றியதால் நான் என் உணர்வு நிலையை அடைந்தேன்.
“நாங்கள் புறப்படுகிறோம்” இருவர் தொனியும் ஒன்றாய் ஒலித்தது.
நான் தர்ம சங்கடமாய் உணர்ந்தேன். என்னதான் கௌதமன் ரவி இருவரும் உடன் இருந்தாலும் கூட தனித்து விடப்பட்ட உணர்வு எனக்குள், கண்ணை கட்டி காட்டில் விடப்படும் நிலை என்னவென்று நிகழ்காலத்தில் உணர்கிறேன்.
ஆதித்தன் ஊருக்கு போக வேண்டியது கட்டாயம் என்பதால், தமிழ்ராஜாவாவது உடன் இருந்தால் தேவலாம் போல் இருந்த போதிலும், அவன் முகத்தில் தெரிந்த அவசரம், அவனுக்கு என்ன வேலையோ என்று மனதின் ஏக்கத்தை மறைத்துக்கொள்ளச்செய்தது.
அவ்வப்போது அம்மா முந்திரிக்கொட்டை, என்று செல்லமாய் தலையில் தட்டுவதின் அர்த்தம் இப்போது புரிந்தாலும் கூட, நிகழ்வுகளின் அவசியத்தில் தலையிடாமல் இருக்க இந்த யாழினியால் முடியவில்லையே ஏன்?
நேரம் கடந்த இரவு என்பதால், எப்படி பேருந்து நிலையம் செல்வார்கள் என்றொரு கவலை என்னுள் எழுந்ததின் ஊடாகவே, முதல் முறை வந்த நண்பர்களை சரிவர உபசரிக்கும் நிலையில் நான் இல்லாதது ஒரு குறையாகவே பட்டது எனக்கு.
இருவர் முகத்திலும், சற்று சீக்கிரமே விடைகொடுத்தால் தேவலை என்றொரு பாவனைத்தோன்றியது.
விடைபெறும் தோரணையில் விக்னேஷ் என்கைப்பற்றி குலுக்கவே, மூவருக்கும் விடைதரும் இக்கட்டான நிலைக்கு நான் தள்ளப்பட்டேன்.
நான் விரும்பியது எதுவும், அங்கே நடக்கவில்லை, என் வாழ்வை சூழ்நிலை வாழ்ந்துக்கொண்டிருந்தது என்பதே நிஜம். சூழலுக்கு ஏற்ப மாறும் பச்சோந்தி தனம் எப்பொழுது என்னிடம் வந்து ஒட்டிக்கொண்டது என்று எனக்கு தெரியவில்லை.
நானும் பேருந்து நிலையம் வரை வருகிறேனே என்று எழுந்தேன்.
ஆதித்தனும், தமிழும் மறுப்பதற்கு முன்னதாகவே, ஜீவா இப்பொழுது அவசியம் போகவேண்டுமா? என்றொரு வினாவை முன்வைக்க, அதில் என்மீதான கரிசனை தென்பட்டதையும் மீறி, என் மீதான உரிமைபாராட்டல் சற்று அதிகம் தலைதூக்கவே, அதை மறுக்கும் மனோ நிலைக்கு நான் ஆட்பட்டதால், நிச்சயம் போக வேண்டும் என்றொரு பதிலை உதிர்த்துவிட்டு, தமிழ்ராஜாவி்ன் கரம் பற்றிக்கொண்டு அவர்களுடாக நைடக்க இடைப்பட்டேன்.
என் வார்த்தையில் சற்று அழுத்தம் தெரித்திருக்கவேண்டும். மற்றவரின் வித்தியாச பார்வையையோ, ஜீவாவின் கஞ்சித்தன்மைக்கொண்ட பார்வையை எதிர்நோக்கும் சக்தி என்னிடம் இல்லாததாலேயே, தமிழ்ராஜாவின் பற்றுதலோடு நகரவேண்டியிருந்தது.
பேருந்து நிறுத்தம் வரை நீங்கள் வரவேண்டியதில்லை யாழினி, நான் நிறுத்தியிருக்கும் கார் வரை வந்தால் போதுமானது, நான் இவர்கள் இருவரையும் சென்னை பேருந்தில் பத்திரமாக அனுப்பி வைக்கிறேன், அதுவுமல்லாமல், நீங்கள் கவலைப்படும் அளவிற்கு இருவரும் குழந்தைகளாக எனக்கு தோன்றவில்லை என்றான்.
ஜீவாவிடம் அவ்வாறு பேசியதில் யாருக்கும் உடன்பாடில்லை போலும், என் நிலையும் அவஸ்தையும் அவர்களுக்கு புரியவாய்ப்பில்லையே?
மற்றபடி அங்கு ஒரு ஆழமான மௌனமே விரவியது.
லேசனா தென்றல், இரவிற்கே உரித்தான எங்கோ நாய் குரைக்கும் ஓசை, சன்னமான நிலவொளியுடன் தெளிவில்லா உருவத்தை பறைச்சாற்றும் இருள், என் கண்களின் ஓரம் பனித்த கண்ணீரை அவர்கள் அறிய செய்ய வாய்ப்பில்லை.
விக்னேஷ் ஓட்டுனர் இருக்கையிலும், ஆதித்தன் அருகிலுமாக அமர்ந்துவிட, அந்த முதியவள் இங்குதான் எங்கேனும் இருக்கக்கூடும் யாழினி, நீ தைரியமாய் போய் அவளிடமே கேள், விடை கிடைக்கும், பிறகு ஜீவாவிடம் அப்படி நடந்திருக்க வேண்டாம், உன் குழப்பம் என்னவென்று தெரியவில்லை. ஒரு வேளை நீ ஜீவாவை நேசிப்பதாய் உனக்கு தோன்றினால், அவனிடம் சொல்வதில் எந்த தவறும் இல்லை. திருமணமானவனா? என்றொரு சந்தேகம் இருப்பின் இதை நீ அவனிடம் வெளிப்படையாகவே கேட்டுவிடலாம். பிறரை காயப்படுத்தி அதில் மகிழ்ச்சியடைக்கூடியவள் நீ அல்ல வென்பதால் நான் இதை உனக்கு கூறுகிறேன் என்றான்.
நான் மௌனித்தேன். என் பலவீனம் மற்றவருக்கு தெரியாமல் இருள் எனக்கு துணை புரிந்தாலும் கூட நண்பனாகிய தமிழ்ராஜாவை ஏமாற்ற என்னால் முடியவில்லை.
எங்கள் கைகள் பிரிந்த போது இருவர் உள்ளங்களும் இணைந்து என் பிரச்சனை அவனுடையதாக மாறியதால், கனத்த இதயம் அவனுடையதாகியது.
தாய், தகப்பன், கணவன் மற்றும் பல உறவுகள் இருந்தபோதிலும் கூட நட்பு மட்டுமே பால் பாகுபாடற்று வாழும் என்ற எண்ணம் தோன்றியது என்னுள்.
கார் கண்ணீர் துளிகளால் மங்கலாக்கப்பட்ட பார்வையில் இருந்து மறைந்து போனது.
என் மனம் முதியவளை தேடி................................
தொடரும்...