பரியங்க யோகம் - பெண் இன்ப யோகம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பரியங்க யோகம் - பெண் இன்ப யோகம்

Post by ஆதித்தன் » Sat Jun 15, 2019 1:12 pm

திருமூலர் பாடல் :

https://thirumanthiram3.wordpress.com/1 ... 25-to-828/

#825. போகத்தை யோகமாக்க வேண்டும்

பூசுவன எல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறுங்குழல் மாலையும் சாத்திக்
காயக் குழலி கலவியொடும் கலந்து,
ஊசித் துளையுற, தூங்காது போகமே.

பூசத் தகுந்த வாசனைப் பொருட்களை எல்லாம் பூசிக் கொண்ட ஓர் ஆடவன், மணம் வீசும் மலர் மாலையை அணிந்த ஒரு பெண்ணுடன் புணர்ச்சியில் ஈடுபடும் பொழுது அவன் உள்ளம், தலை உச்சியில் உள்ள பிரமரந்திரத்தின் மீது நிலைத்திருந்தால் அந்தப் புணர்ச்சி தளர்ச்சி அடையாது.

#826. நாத விந்துக்களாக மாறிவிடும்!

போதத்தை உன்னவே போகாது வாயுவும்
மேகத்தை வெள்ளியும் மீளும் வியாழத்தில்
சூதொத்த மென் முலையாளும் நல் சூதனும்
தாதில் குழைந்து தலை கண்டவாறே.

உச்சித் தொளையாகிய பிரமரந்திரத்தில் விளங்குகின்ற பேரறிவு பொருந்திய சிவனை எண்ணியபடி ஓர் ஆடவன்
புணர்ச்ச்சியில் ஈடுபட்டால், அவனது காம வாயு விரைவாகத் தொழில் புரியாது. . நீரின் தன்மை கொண்ட அவன் சுக்கிலம் பெண்ணின் சுரோணிதத்தில் கலக்காமலேய திரும்பிவிடும். சூதாடும் கருவியைப் போன்ற ஸ்தனங்கள் உடைய பெண்ணும், உடல் என்னும் தேரைச் செலுத்தும் ஆடவனும், செய்த இந்தக் கூட்டுறவால் வெளிப்பட்ட சுக்கிலமும் சுரோணிதமும் நாத விந்துக்களாக மாறித் தலையில் சென்று பொருந்தும்.

இந்த யோகத்தில் ஈடுபடுபவன், தன் தலையில் நாதமாகிய சிவனும் விந்துவாகிய சக்தியும் விளங்குவதைக் காண்பான். பிரமரந்திரத்தை நினைவில் கொள்வதால் காம வாயு சுக்கிலத்தை நீக்கம் செய்யாது. அது நேராக மூலாதாரத்திலிருந்து தலையைச் சென்று அடைந்துவிடும்

#827. உடல் தளராது

கண்டனும் கண்டியும் காதல்செய் யோகத்து,
மண்டலம் கொண்டுஇரு பாலும் வெளிநிற்கும்
வண்டியை மேல்கொண்டு வான் நீர் உருட்டிடத்
தண்டு ஒருகாலும் தளராது அங்கமே.

ஒரு தலைவனும் தலைவியும் விருப்பத்துடன் கூடிப் புணரும் போது; அக்கினி மண்டலம், கதிரவன் மண்டலம் என்ற இரண்டையும் கடந்து மேலே சென்று; சந்திர மண்டலத்தில் தலையின் மேலே உள்ள வெளியை உணருவர். அங்கு சந்திர மண்டலத்தில் வான் கங்கை ஒளியைப் பெருக்கும். அதனால் அவர்கள் உடல் ஒரு போதும் தளர்ச்சி அடையாது.

#828. விந்துவை வெற்றி பெறலாம்

அங்குஅப் புணர்ச்சியும் ஆகின்ற தத்துவம்
அங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமல் பரிகரித்துத் தம்மைத்
தங்கிக் கொடுக்க தலைவனும் ஆமே.

புணர்ச்சியின் போது காமத் தீ உடலிலிருந்து விந்துவை நீக்கம் செய்யும். அவ்வாறு நிகழாமல் விந்துவைப் பாதுகாத்து யோகத்தால் விந்து நீக்கத்தை வெற்றி கொண்டவன் ஒரு தலைவன் ஆவான்.


#829. உடல் வசப்படும்

தலைவனும் ஆயிடும் தன் வழி ஞானம்
தலைவனும் ஆயிடும் தன் வழி போகம்
தலைவனும் ஆயிடும் தன் வழி உள்ளே
தலைவனும் ஆயிடும் தன் வழி அஞ்சே.

இவ்வாறு வெற்றி பெற்ற தலைவன் தன் ஆன்மாவை அறிந்தவன் ஆவான். அவனைச் சிவயோகம் தானே வந்தடையும். தன்னைத் தானே வசப்படுத்தி ஆளும் திறமை அவனுக்கு வரும். அவன் சொற்படி ஐந்து பூதங்களும் நடக்கும்.

#830. ஐந்து நாழிகை போதும்!

அஞ்சிக் கடிகைமேல், ஆறாம் கடிகையில்
துஞ்சுவது ஒன்றத் துணைவி துணைவன் பால்
‘நெஞ்சு நிறைந்தது வாய்கொளது’ என்றது
பஞ்சக் கடிகை பரியங்க யோகமே.

பரியங்க யோகம் ஐந்து நாழிகைப் பொழுது மட்டுமே செய்ய வேண்டும். ஆறாம் நாழிகையில் துணைவி தன் துணைவனுடன் பொருந்தி உறங்குவாள். ஐந்து நாழிகைப் பரியங்க யோகமே அவளுக்கு மன நிறைவை அளித்துப் போதும் இனி வேண்டாம் என எண்ணச் செய்யும். இதற்கு மேலே பரியங்க யோகம் நீடித்தால் விந்து வெளிப்படும்.

#831. குண்டலினியைக் கடக்க இயலும்

பரியங்க யோகத்துப் பஞ்சக் கடிகை
அரியஇவ் யோகம் அடைந்தவர்க்கு அல்லது
சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை
உருவித் தழுவ ஒருவர்க்கு ஒண்ணாதே.

நழுகின்ற வளையல்கள் அணிந்த கைகளை உடைய, மணம் பொருந்திய கொங்கைகளை உடைய குண்டலினி சக்தியைக் கடந்து மேலே செல்வது மிகவும் அரிது. பரியங்க யோகத்தில் அரிதாக ஐந்து நாழிகை இருக்க முடிந்தவனுக்கே இந்த திறமை வாய்க்கும்.

#832. பரியங்க யோகம் மேன்மை தரும்

ஒண்ணாத யோகத்தை உற்றவர் ஆர் என்னில்,
விண் ஆர்ந்த கங்கை விரிசடை வைத்தவன்
பண்ஆர் அமுதினைப் பஞ்சக் கடிகையில்
‘எண்ணாம்’ என் எண்ணி இருந்தான் இருந்ததே.

யாவருக்குமே அடைவதற்கு அரிதாகிய இந்த யோகத்தைச் செய்து அதை அறிவித்தவர் யார் தெரியுமா? வான் கங்கையை ஜடையில் தரித்த ருத்திரன் ஆவான். அவன் உருவத்தை எண்ணாமல், நாதத்துடன் கூடிய ஒளியை ஐந்து நாழிகைப் பொழுது எண்ணமல் எண்ணி அனுபவித்திருந்தான்.

#833. யோகத்துக்கு உரிய வயது

ஏய்ந்த பிராயம் இருபதும் முப்பதும்
வாய்ந்த குழலிக்கும் மன்னர்க்கும் ஆனந்தம்
ஆய்ந்த குழலியோடு ஐந்தும் மலர்ந்திடச்
சோர்ந்தன சித்தமும் சோர்வு இல்லை வெள்ளிக்கே.

இந்தப் பரியங்க யோகம் செய்வதற்கு ஏற்ற வயது பெண்ணுக்கு இருபதும், ஆணுக்கு முப்பதும் ஆகும். அப்போது இந்த யோகத்தில் பொருந்திய இருவருக்கும் ஆனந்தம் உண்டாகும். பெண்ணின் ஐம் பொறிகளும் இன்பத்தில் மலர்ந்திடும். ஆனால் ஆணுக்கு விந்து நீக்கம் ஏற்படாது.

#834. கள்ளத் தட்டானார்

வெள்ளி உருகிப் பொன்வழி ஓடாமே
கள்ளத் தட்டானார் கரியிட்டு மூடினார்
கொள்ளி பரியக் குழல் வழியே சென்று
வள்ளி உள்நாவில் அடக்கி வைத்தாரே.

வெண்மையான சுக்கிலம் உருகிப் பொன்னிற சுரோணிதத்தில் கலக்காமல் தடுத்தார் மறைந்து இருந்த சிவன் என்னும் தட்டானார். அவர் கரியாகிய அருளினால் பக்குவம் செய்வார். தீ என்ற அக்கினிக் கலை உண்டாகும் வண்ணம், ஊதுகுழல் ஆகிய சுழுமுனை வழியே சென்று; உள்நாவில் ஒளிமயமான சந்திர மண்டலத்தை விளங்க வைப்பார்.

#835. சிவசூரியன் விளங்குவான்

வைத்த இருவரும் தம்மில் மகிழ்ந்து உடன்
சித்தம் கலங்காது செய்கின்ற ஆனந்தம்
பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும்
வித்தகனாய் நிற்கும் வெங்கதிரோனே.

காம வயப்படாமல் தெய்வ காரியமாக எண்ணிப் பரியங்க யோகத்தைச் செய்ய வேண்டும். விந்து நீக்கம் இல்லாமல் ஆணும் பெண்ணும் புணரும் போது இருவரும் இன்பம் அடைவர். அவர்களுக்குப் பத்து திசைகளுக்கும் தலைவனான பதினெட்டு வகைத் தேவர்களுக்கும் தலைவனான சிவசூரியன் விளங்குவான்.

#836. நாதத்தில் திளைப்பர்

வெங்கதி ருக்கும் சனிக்கும் இடைநின்ற
நங்கையைப் புல்லிய நம்பிக்கு ஓர் ஆனந்தம்
தங்களில் பொன் இடை வெள்ளிதாழா முனம்
திங்களில் செவ்வாய் புதைந்திருந்தாரே.

விருப்பத்தைத் தருபவன் கதிரவன். பிறப்பைத் தருவது கருவாய். பரியங்க யோகம் செய்யும் ஆடவன் இவை இரண்டுக்கும் இடையில் ஆனந்தம் அடைவான். அவ்வகைப் புணர்ச்சியில் சுக்கிலம் சுரோணிதம் வழியே பாயாது. எனவே இருவரும் சந்திர மண்டலத்தில் உள்ள செந்நிறம் உடைய சக்தியாகிய நாதத்தில் திளைத்து இருப்பர்.

#837. ஊர்த்துவரேதசு

திருத்திப் புதனைத் திருத்தல் செய்வார்க்குக்
கருத்தழகாலே கலந்து அங்கு இருக்கில்
வருத்தமும் இல்லையாம் மங்கை பங்கற்கும்
துருத்தியில் வெள்ளியும் சோராது எழுமே.

அறிவைத் திருத்தி அமைத்து, மனத்தைத் தூய்மைப் படுத்தி, கருத்தழகுடன் பரியங்க யோகம் செய்யும் போது. எந்தத் துன்பமும் இராது. உடலில் விந்து நீக்கமும் இராது. அதன் விளைவு என்ன? விந்துவைச் செலுத்தும் காம வாயு மேல் நோக்கிச் செயல்படும் ஊர்த்துவரேதசு வந்து அமையும்.

#838. உடல் உருகும்

எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்றிட்டால்
மெழுகு உருகும் பரிசு எய்திடும் மெய்யே
உழுகின்றது இல்லை ஒளியை அறிந்தபின்
விழுகின்றது இல்லை வெளி அறிவார்க்கே.

சுவாதிஷ்டானத்தில் உள்ள காமத்தீயை மேலே ஏற்றிப் புருவ மத்திக்குக் கொண்டு செல்ல வேண்டும். அப்போது தீயின் முன் வைத்த மெழுகைப் போல யோகியின் உடல் உருகிவிடும். புருவ மத்தியைத் தாண்டிச சென்று துவாசாந்தப் பெருவெளியையும் அங்குள்ள ஒளியையும் அறிந்தவரின் உடல் ஒருநாளும் கீழே விழாது. மெழுகு போல உருகிவிடும்.

#839. ஒளி தெரிந்தால் உலகம் தெரியாது

வெளியை அறிந்து வெளியின் நடுவே
ஒளியை அறியின் உளிமுறி ஆமே
தெளிவை அறிந்து, செழு நந்தியாலே
வெளியை அறிந்தனன் மேல் அறியேனே.

வானத் தானத்தை அறிந்து கொண்டு, அங்கே விளங்கும் பொன்னிற ஒளியைக் காண அறிந்து கொண்டால் என்ன ஆகும்? உள்ளம் வேறுபடாமல் தெளிந்த ஞானம் கிடைக்கும். சிவன் அருளால் வானமும் அதன் நடுவில் ஒளியும் தெரியும். வேறு எதுவும் தெரியாது. ஒளி தெரிந்தால் உலகம் தெரியாது.

#840. உடலில் உறையும் தெய்வங்கள்

மேல்ஆம் தலத்தில் விரிந்தவர் ஆர்எனின்,
மால்ஆம் திசைமுகன் மாநந்தி யாயவர்
நால்ஆம் நிலத்தின் நடுஆன அப்பொருள்
மேலாய் உரைத்தனர் மின் இடையாளுக்கே.

ஒருவருக்கு மேலாக ஒருவர் என்று நம் உடலில் விளங்கும் தெய்வங்கள் யார் யார்? திருமால், நான்முகன், உருத்திரன், பராசக்தி, பரமசிவம் என்னும் தெய்வங்கள் நம் உடலில் உறைகின்றனர். துரிய பூமியில் பராசக்தியை விட மேலே இருப்பான் சிவன்.


#841. நெடுங்காலம் வாழ இயலும்

மின்இடை யாளு மின்னாளனும் கூட்டத்துப்
பொன்இடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து
தன்னோடு தன்னைத் தலைப்பெய்ய வல்லிரேன்
மண் இடைப் பல்ஊழி வாழ்தலும் ஆமே.

மின்னல் போன்ற இடையை உடைய சக்தி தேவியையும், அவளை ஆளும் சிவனையும், அவர்கள் கூட்டத்தையும் பொன் ஒளி கொண்ட வானத்தில் நிலை பெறச் செய்ய வேண்டும். அந்தக் கூட்டத்தில் தன் ஆன்மாவையும் காண அறிந்தவர் இந்த உலகில் நெடுங்காலம் வாழ இயலும்.

#842. ஆன்மாவே யாகப் பொருள்

வாங்கல் இருதலை வாங்கிலில் வாங்கிய
வீங்க வலிக்கும் விரகு அறிவார் இல்லை
வீங்க வலிக்கும் விரகு அறிவாளரும்
ஓங்கிய தன்னை உதம் பண்ணினாரே.

காம வாயுவை உள்ளே இழுத்துச் சுக்கிலம் கெடுமாறு செய்தலையும், அவ்வாறு உள்ளே இழுத்த காம வாயுவை மேலே செலுத்தும் வழியினை அறிபவர் இல்லை. அத்தகைய மாற்றங்களைச் செய்ய அறிந்து கொண்டவர் தன்னையே சிவனிடம் ஹோமப் பொருளாக அர்ப்பணிப்பவர் ஆவார்.

#843. முடி கறுக்கும்!

உதம் அறிந்து அங்கே ஒருசுழிப் பட்டால்
கதம் அறிந்து அங்கே கபாலம் கறுக்கும்
இதம் அறிந்து எ ன்றும் இருப்பாள் ஒருத்தி
பதம் அறிந்தும் உளே பார் கடிந்தாளே.

ஆன்மாவை இறைவனுக்கு ஓமப் பொருளாக்கி அதைச் ஸஹஸ்ர தலத்தில் பொருத்தினால், அப்போது தலை மயிர் கறுத்து விடும்.சக்தியும் அவனது இதம் அறிந்து செயல் புரிவாள். அவன் பக்குவத்தை அறிந்து கொண்டு, பிருத்விச் சக்கரத்தின் செயலை மாற்றி அருளுவாள் . மேலே சென்று விட்ட காம வாயு மீண்டும் கீழே சென்று விடாமல் தடுப்பாள்.

#844. அடியும் இல்லை நுனியும் இல்லை!

பார் இல்லை, நீர் இல்லை, பங்கயம் ஒன்று உண்டு;
தார் இல்லை, வேர் இல்லை, தாமரை பூத்தது ;
ஊர் இல்லை, காணும் ஒளி அது ஒன்று உண்டு
கீழ் இல்லை, மேல்இல்லை, கேள்வியிற் பூவே.

ஆயிரம் இதழ்த் தாமரை ஒன்று உண்டு. ஸஹஸ்ரதளம் என்று அதன் பெயர். அது சிதாகாசத்தில் இருப்பதால் அங்கு நிலமோ நீரோ இல்லை! இந்தத் தாமரை மலர்ந்தே உள்ளது. அதனால் அதற்கு அதற்கு மொட்டும் இல்லை, வேரும் இல்லை. அதில் ஒளியால் நிரம்பி உள்ளது. ஒளி எங்கும் பரவி இருப்பதால் அதற்குக் குறிப்பிட்ட இடம் என்று எதுவும் இல்லை. நாதத்துக்குக் காரணம் இந்த தாமரையே என்றாலும் அதற்கு அடியும் இல்லை நுனியும் இல்லை!
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”