உடலுக்கு பலம் தரும் சூப்கள்

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

உடலுக்கு பலம் தரும் சூப்கள்

Post by cm nair » Tue Oct 08, 2013 11:22 am

உடலுக்கு பலம் தரும் சூப்கள் வரிசையில் நெல்லிக்காய் மற்றும் வில்வ இலை சூப்கள் தயாரிக்கும் முறை மற்றும் அதன் பயன்களைப் பார்ப்போம்.

நெல்லிக்காய் வைட்டமின் 'சி' செறிந்த நெல்லிக்காய் ஆயுளை நீடிக்கும் ஆற்றலுடையது. சிறந்த ஊட்டச்சத்தும், உயிர்ச்சத்தும் உடையது. குறிப்பாக நுரையீரலுக்கு வலிமை தரும். உடலுக்கு உரமூட்டும்.

நெல்லிக்காய் சூப்:

தயாரிக்கத் தேவையான பொருட்கள்:

நெல்லிக்காயை வேக வைத்த தண்ணீர் - 4 கப்
கார்ன் ப்ளார் - 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள்- தேவையான அளவு

செய்முறை:

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இரண்டு நிமிடம் வெண்ணெய்யில் வதக்கவும். பின்பு மாவையும் சேர்த்து வறுக்கவும். நெல்லிக்காய் வேக வைத்த தண்ணீரைச் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.


வில்வம் இறைவனுக்கு உகந்த மூலிகை என்பது சில நம்பிக்கையாளர்களின் கருத்து. இது உடல் தாதுகளை ஊக்குவிக்கிறது. உடலுக்கு வலிமையையும், வனப்பையும் தருகிறது. தாது நஷ்டத்தைப் போக்கி, உடலுக்கு புஷ்டி தரும்.

வில்வ சூப்:

தயாரிக்கத் தேவையான பொருட்கள்:

வில்வ இலை - 1 கப்
(அ) வில்வ பொடி 15 கிராம் - 3 டீஸ்பூன்
தக்காளி - 1
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிது
இஞ்சி, பூண்டு - சிறிது
மிளகுத்தூள், சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
கம்பு மாவு - 2 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு முதலியவற்றை நறுக்கிக் கொள்ளவும். வில்வ இலையுடன் தண்ணீர் கலந்து வேக வைத்து கொள்ளவும். கம்பு மாவை தண்ணீரில் கரைத்து கலக்கவும். கொதி நிலையில் நறுக்கிய காய்கறிகள், கலந்து கொதித்த பின்பு மசித்து சூடு ஆறும் முன்பு வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.

உடலுக்கு பலம் தரும் சூப்கள் வரிசையில் ஆவாரம் பூ மற்றும் முடக்கற்றான் சூப்கள் தயாரிக்கும் முறை மற்றும் அதன் பயன்களைப் பார்ப்போம்.

அழகை வர்ணிக்க 'ஆவாரம் பூவே' என்கிறோம். ஆவாரம் பூ பொன் நிறத்தில் பூக்கும் அழகான பூ. உடலுக்கு வீரியமளிக்கும் தங்க பஸ்பத்திற்கு இணையாக கூறப்படுகிறது. இதை தினமும் உண்டு வந்தால், மேனி மிளிரும் உடல் உரமடையும்.

ஆவாரம் பூ சூப்:

தேவையான பொருட்கள்:

ஈர ஆவாரம்பூ - 1 கப்
(அ) உலர்ந்த ஆவாரம்பூ பொடி - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 250 மிலி
கேரட் - 1
பீன்ஸ் - 5
தக்காளி - 1
வெங்காயம் - சிறிது
இஞ்சி - சிறிது
பூண்டு - 2 பல்
கொத்தமல்லி, புதினா - சிறிது
மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா முதலியவற்றை பொடியாக நறுக்கவும். தண்ணீரில் பூவைக் கலக்கவும். பிற காய்கறி கீரைகளைக் கழுவி நறுக்கி தண்ணீரில் கலந்து வேக வைக்கவும். நல்ல மணம் வரும் போது மசித்து அடுப்பை நிறுத்தி சூடு ஆறும் முன் வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து பரிமாறவும்.

முடக்கற்றான் அதன் பெயருக்கேற்ப முடக்குவாத நோய்களை தீர்க்க வல்லது. சிறுநீரை பெருக்கும். மூட்டு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை நீக்கும். பசியை தூண்டும். உடலை உரமாக்கும் குணம் கொண்டது

முடக்கற்றான் சூப்:

தேவையான பொருட்கள்:

முடக்கற்றான் கீரை - 1 கப்
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3
புளி - எலுமிச்சை அளவு
பெருங்காயம் - சிறிதளவு
பூண்டு - 1
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கீரையை நன்கு கழுவி, ஆய்ந்து தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். துவரம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணீரில் உப்பு, புளியைக் கரைத்து கீரையில் விடவும். அரைத்து வைத்த விழுதையும் கீரையில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின்பு இதனை இறக்கி வைத்து கடுகு பெருங்காயம் ஆகியவற்றை தாளித்துச் சேர்க்கவும். சூடாகப் பரிமாறவும்.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”