Page 1 of 1

பழங்கள் அழகும் தரும்...

Posted: Fri Jun 20, 2014 8:47 pm
by தீபக்
Image

பியூட்டி

சோப், கிரீம், தலைக்குத் தடவுகிற எண்ணெய், ஷாம்பு, லிப்ஸ்டிக்... இப்படி அழகுடன் தொடர்புடைய பல பொருட்களிலும் ஏதோ ஒரு பழத்தின் சாரம் பிரதானமாக சேர்க்கப்பட்டிருப்பதாக அறிவிப்பதுதான் லேட்டஸ்ட் விளம்பர உத்தி. உடலின் உள் உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு அவசியமாகிய அதே பழங்கள், வெளிப் பூச்சிலும் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. அதனால்தான் அழகு சாதனத் தயாரிப்புகளிலும் பழங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொரு உறுப்பையும் அழகாக்க பழங்களைக் கொண்டு செய்யப்படுகிற சிகிச்சையைப் பரிந்துரைக்கிறார் அழகுக்கலை நிபுணர் ஹசீனா சையத். பழங்களைக் கொண்டு அவர் செய்து காட்டுகிற சிகிச்சைகள், அழகுக்கும் இளமைக்கும் உத்தரவாதம்... (ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட பழங்கள் சிறப்பானவை).

கூந்தலுக்கு...

கருப்பு திராட்சையைக் கசக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். அதை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் திராட்சை சாறு சேர்த்துக் குழைத்து, தலையில் பேக் மாதிரி போட்டு, சிறிது நேரம் கழித்து அலசவும். இது கூந்தலை மென்மையாக்கும்.

கமலா ஆரஞ்சுச் சாற்றில் பஞ்சை நனைத்து, வேர்க்கால்களில் படும்படி தடவி, மசாஜ் செய்து விட்டு, 10 நிமிடங்கள் கழித்துக் குளித்தால் பொடுகு போகும்.பழங்களை கூந்தலுக்கு உபயோகிக்கிற போது, கூடிய வரையில் ஷாம்பு உபயோகத்தைத் தவிர்ப்பது நல்லது. 50 கிராம் சீயக்காயையும் 10 கிராம் பூந்திக் கொட்டையையும் முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும். அதன் இரண்டின் சாரமும் தண்ணீரில் இறங்கிவிடும். பழ மசாஜுக்கு பிறகு இந்தச் சாற்றை இன்ஸ்டன்ட் ஷாம்புவாக தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம்.

சருமத்துக்கு...

பப்பாளியை பழங்களின் அரசி என்றே சொல்லலாம். உள்ளுக்கு சாப்பிடவும் சரி, வெளிப்பூச்சுக்கும் சரி, பப்பாளியைப் போன்ற மிகச் சிறந்த பழம் வேறில்லை. பப்பாளியிலுள்ள பப்பைன் என்கிற என்சைம், சருமத்தை மிருதுவாக்கி, புத்துணர்வடையச் செய்யக்கூடியது. ஒருநாள் விட்டு ஒருநாள் பப் பாளிப் பழக்கூழை உடல் முழுக்க தடவி, அதன் மேல் மெல்லிய மஸ்லின் துணியைக் கட்டிக் கொண்டு, ஊறவிடவும்.

பிறகு அதை அப்படியே மசாஜ் செய்துவிட்டு, கடலை மாவு கொண்டு கழுவவும். இதனால் சருமம் நிறம் பெறும். மென்மையாகும். பெரிய பழக்கடைகளில் பீச் பழம் கிடைக்கிறது. பெரிய பெரிய பார்லர்களிலும் பீச் ஃபேஷியல் மிகவும் பிரபலம். அந்தப் பழத்தை வாங்கி, மையாக மசித்து, தேன் கலந்து முகம் மற்றும் கழுத்துக்கு மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊறியதும் கழுவலாம். இது சருமத்தின் இறந்த செல்களை அகற்றி, சருமத்தை மென்மையாக்குவதுடன், ஈரப்பதத்தையும் தக்க வைக்கும்.

ஸ்ட்ராபெர்ரியின் சாறை எடுத்துப் பஞ்சில் நனைத்துத் தடவி, முகத்தை கிளென்ஸ் செய்யவும். பிறகு அதே பழத்தை மசித்து பால் அல்லது தேன் கலந்து மசாஜ் செய்யவும். பிறகு அவகேடோ எனப்படுகிற பட்டர் ஃப்ரூட்டையும் ஊற வைத்த பாதாமையும் பசும்பால் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து, முகத்தில் ஸ்க்ரப் மாதிரி தடவி கரும்புள்ளிகளை நீக்கவும் பிறகு முகத்தைத் துடைத்துவிட்டு, மூக்கு, கண்கள், வாய் பகுதிக்கான இடைவெளி விட்டு, முகத்தை மூடும்படியான மெல்லிய துணியை விரித்து, அதன் மேல் மறுபடி சிறிது ஸ்ட்ராபெர்ரி கூழை வைக்கவும். கால் மணி நேரம் ஊறியதும் கழுவி விடவும். இந்த ஃபேஷியல் சருமத்தின் அதிகப்படியான எண்ணெயை அகற்றும். இன்ஃபெக்ஷன் வராமல் காக்கும். பருக்களை விரட்டும். நிறத்தை அதிகரிக்கும்.

கொய்யா, கிரீன் ஆப்பிள் மற்றும் பப்பாளி மூன்றையும் சிறிது எடுத்து கரகரப்பாக அரைக்கவும். முதலில் சருமத்தை இளநீர் கொண்டு துடைக்கவும். அரைத்த விழுது வைத்து மசாஜ் செய்யவும். பிறகு முகத்தில் மெல்லிய துணி (கண்கள், மூக்கு, வாய் பகுதி தவிர) விரித்து, அதன் மேல் இளநீரின் வழுக்கை, கிரீன் ஆப்பிள் இரண்டும் சேர்த்த விழுதைப் பரப்பி, 15 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு வெறும் தண்ணீரில் முகம் கழுவினால் பளிச்சென மாறும்.

கிரீன் ஆப்பிளை மசித்து, தேங்காய்ப் பால் சேர்த்து, ஒருநாள் விட்டு ஒருநாள் சருமத்தில் தடவி வந்தால், நிறம் மேம்படும். ஸ்ட்ராபெர்ரியையும் மாதுளை முத்துகளையும் கரகரப்பாக அரைத்து, உதடுகளின் மேல் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவும். இது உதடுகளில் உள்ள இறந்த செல்களை நீக்கி, இயற்கையான சிவப்பழகைத் தரும்.

கருப்பு திராட்சையை மசித்து, கைகளின் மேல் தடவி, மென்மையாக மசாஜ் செய்து, அதே திராட்சை விழுதையே பேக் மாதிரி போட்டு, ஊறியதும் கழுவினால், கைகள் சுருக்கங்கள் இல்லாமல் இளமையாக இருக்கும். பீச் மற்றும் பிளம் இரண்டையும் அரைத்து, சிறிது பால் பவுடர் சேர்த்துக் குழைத்துக் கொள்ளவும். பெடிக்யூர் செய்து முடித்ததும், இந்த விழுதை கால்களில் தடவி, மெல்லிய துணியால் சுற்றி, சிறிது நேரம் ஊற விட்டு எடுத்தால், கால்கள் பளீரென மாறும். வறட்சி நீங்கும்.